அதிகாரிகளால் மூடி மறைக்கப்பட்ட திட்டங்களை 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்" மூலம் வெளிக் கொண்டுவந்த கலெக்டர்!

அதிகாரிகளால் மூடி மறைக்கப்பட்ட திட்டங்களை 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்"  மூலம் வெளிக் கொண்டுவந்த கலெக்டர்!

ஆர்.ரமேஷ்,

என்னதான் மாவட்ட ஆட்சியர் திங்கள் மனுக்களை பெற்று நடவடிக்கைக்காக சம்மந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பிவைத்தாலும் கூட கூட, உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்கிற திட்டத்தின் கீழ் ஆட்சியர் தலைமையிலான அதிகாரிகள் டீம் கிராமங்களுக்கு நேரடியாகச்செல்லும் போது பல உண்மைகள் தெரிய வந்துள்ளது. குறிப்பாக வேளாண்மை துறையின் அரசு திட்டங்களை விவசாயிகளுக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டிருந்ததெல்லாம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

சற்று விவரமாக பார்ப்போம்   

 24.07.2024 அன்று மாலை முதல்  25.07.2024 இன்று காலை 9 மணி வரை 'உங்களைத் தேடிஉங்கள் ஊரில்" என்ற திட்டத்தின் கீழ் நிம்மியம்பட்டு ஊராட்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ்,இ.ஆ.ப., அவர்கள்  தொடர் நிகழ்வாக மேற்கொண்ட பணிகள்.

'உங்களைத் தேடிஉங்கள் ஊரில்" திட்டத்தின் தொடர் நிகழ்வாக (24.07.2024) அன்று மாலை நேரடியாக விவசாயம் மேற்கொள்ளும் பகுதிகளில் நேரடியாக மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ்,இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

 இதில் மேல் நிம்மியம்பட்டு பகுதியில் பல்வேறு வகைபாடுள்ள காய்கறிகள் விளைச்சல் மேற்கொள்ளப்படுவதை நேரடியாக சென்று பார்வையிட்டு அரசு திட்டங்கள் குறித்து அவ்விவசாயிகளிடம் கேட்டறிந்த போது அரசு திட்டங்கள் குறித்து எங்களுக்கு ஏதும் தெரியாது என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

 உடனடியாக சம்மந்தப்பட்ட வேளாண்மைத்துறை அலுவலர்களை வரவைத்து இதற்கான அரசு திட்டங்கள் குறித்து விளக்கமாக தெரிவிக்க வேண்டுமென்றும், இத்திட்டங்கள் குறித்து இப்பகுதியில் சிறப்பு முகாம் அமைத்து விவசாயிகளுக்கு அரசு திட்டங்கள் குறித்து எடுத்துரைக்க வேண்டும் என்று கலெக்டர் உத்தரவிட்டார்.

  மேலும், தொடர்ச்சியாக விவசாயிகளிடம் அரசுத் திட்டங்களில்  விதைகளுக்கு வழங்கக்கூடிய மானியம், பயிர்களுக்கு காப்பீடு மேற்கொள்வது, உரங்கள் பெறுவது, பயிர்களுக்கு பூச்சிக்கடியினால் ஏற்படும் பாதிப்புகளை சம்பந்தப்பட்ட  அலுவலர்கள் விவசாய நிலங்களில் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு, அவர்களுக்கு அரசு அறிவித்துள்ளவாறு வழிகாட்டு முறைகளையும் மற்றும் நலத்திட்டங்களும் வழங்கும் பணிகளை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் விளக்கினார்.

 பின்னர் விவசாயிகள் பயிரிட்டுள்ள கேரட், பீட்ரூட், நூக்கல் ஆகிய தோட்டக்கலை பயிர்களை நேரடியாக பார்வையிட்டு, இதேபோன்று, பல்வேறு பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள காய்கறிகள், பழ வகைகள், கீரைகள் ஆகிய சிறு விவசாயிகளை ஊக்கப்படுத்தி அவர்களுக்கான அரசு திட்டங்;கள் குறித்து எடுத்துரைத்து, உற்பத்தியினை பெருக்கி விவசாயிகளின் நலனில் முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

 இந்த ஆய்வின் போது, விவசாய பணிகள் மேற்கொண்டிருந்த விவசாயி ஊனமாக இருந்ததை கண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் உடனடியாக மாற்றுத்திறனாளித்துறை அலுவலர் அவர்களை அழைத்து, இவ்விவசாயிக்கு மருத்துவ ஆய்வு அறிக்கை பெற்று, மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டையினை வழங்கிட உத்தரவிட்டார்.

  தொடர்ச்சியாக, மேல்நம்மியம்பட்டு கூட்டுரோடு, கொத்தக்கோட்டை, ஜம்புப்பள்ளம் மற்றும் நிம்மியம்பட்டு ஆகிய பகுதிகளில் தெருவிளக்குகள் எரிகின்றதா என்பதையும் பார்வையிட்டு, அக்கிராமங்களில் உள்ள பொதுமக்களிடம் மின்சார குறைபாடுகள் ஏதேனும் உள்ளதா என்பதையும் கேட்டறிந்து, தொடர்ச்சியாக சில மின்கம்பங்களில் மின்விளக்குகள் எரியாததை கண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சி செயலாளருக்கு உடனடியாக சரி செய்யும் பணிகளை மேற்கொள்ள வேண்டுமென  அறிவுறுத்தினார். 

  பின்னர், மேல்நிம்மியம்பட்டு பகுதியில் பள்ளிக்கு செல்ல கூடிய மாணவ, மாணவியர்கள் எங்கள் கிராமத்தில் பேருந்து நிற்பதில்லை என்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் தெரிவித்தனர்.

   உடனடியாக சம்மந்தப்பட்ட போக்குவரத்து அலுவலருக்கு தொடர்பு கொண்டு, இப்பகுதியில்  வாகனங்கள் நிற்பதில்லை என்;று, மாணவர்கள் கோரிக்கையாக தெரிவித்துள்ளனர். இதை உடனடியாக நேரடி களஆய்வு பணி மேற்கொண்டு, சரிசெய்யும் பணியினை மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிட்டார்.

தொடர்ந்து, 25.07.2024 அன்று காலை 06.00 மணி முதல் இவ்ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு கிராம பகுதிளில் குடிநீர் விநியோகம் முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை ஆய்வு மேற்கொண்டு, அப்பகுதி மக்களிடம் எத்தனை மணிக்கு குடிநீர் வருகிறதா என்றும், உங்கள் பயன்பாட்டிற்கு போதுமானதாக உள்ளதா என்பதையும் கேட்டறிந்தார்.

  ஊராட்சி பகுதியில் தூய்மை பணி மேற்கொள்ளப்படுவதை கண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரடியாக அப்பணியாளர்களிடம் சென்று சேவை மனப்பான்மைக்காக தாங்கள் செய்யும் பணிக்காக நான் நன்றி தெரிவித்து, பெருமிதம் அடைகிறேன் என்று சொன்னார்.

  தாங்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களாக சேர்த்துள்ளார்களா என்பதை கேட்டறிந்தார். சேரவில்லை என்பதை அறிந்த மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உடனடியாக இம்மாவட்டத்திலுள்ள அனைத்து தூய்மை பணியாளர்களும் நலவாரியத்தில் உறுப்பினர்களாக சேர்;க்கும் பணியினை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தி, இப்பணியாளருடன் இணைந்து தேநீர் அருந்தி அவர்களை ஊக்கப்படுத்தினார்.

 தொடர்ச்சியாக அப்பகுதியில் கலைஞர் கனவு இல்லம் திட்டப் பணிகள் நடைபெறுவதை பார்வையிட்டு, இதில் தூய்மை பணியாளர் திருமதி.கிருஷ்ணவேனி அவர்கள் பயனடைந்துள்ளதை கண்டு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பெருமிதம் அடைந்தார். 

 மேலும், கால்நடை பராமரிப்பாளரிடம் ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்குவதை ஆய்வு மேற்கொண்டு, அவர்களுக்கு அரசு வழங்கக்கூடிய திட்டங்கள் குறித்து சம்மந்தப்பட்ட அலுவலர்கள் மூலம் எடுத்துரைத்து, அதிகப்படியான பொதுமக்கள் அரசு நிறுவனத்திற்கு பால் வழங்கி, அரசு திட்டங்களை பெற வேண்டுமென்று தெரிவித்தார்.

 தொடர்ந்து, முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் நிம்மியம்பட்டு ஊராட்சி தொடக்கப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு, அம்மாணவர்களுடன் காலை உணவை அருந்தி அம்மாணவர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., அவர்கள் உரையாடினார்.

இந்த ஆய்வின் போது சம்மந்தப்பட்ட அலுவலர்கள் உடன் இருந்தனர்.

 வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திருப்பத்தூர் மாவட்டம்.