ஆசிரியர்களை கண்டு பயப்படாதீர்கள்! சொல்கிறார் திருப்பத்தூர் கலெக்டர்!

ஆசிரியர்களை கண்டு பயப்படாதீர்கள்! சொல்கிறார் திருப்பத்தூர் கலெக்டர்!

 ஆர்.ரமேஷ்,

 திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கான வழிகாட்டி ஆசிரியர்களுக்கான பயிற்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கரபாண்டியன்,இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார்கள்.

   இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசியதாவது: -

ஏன் நாம் அனைவரும் அறிவை நோக்கியே பயணிக்கிறோம் என்றால், அறிவு இருப்பவர்களை தான் நாம் கொண்டாடுகிறோம். எப்பவும் அறிவு அறியாமையை ஆளும், அறிவு ஏன் வேண்டுமென்றால் சிறிய விஷயமாக இருந்தாலும் மிகப் பெரிய சாதனைகளை புரியும். அந்த அறிவை கொடுப்பதுதான் அறிவியல். ஒரு நாடு வல்லரசு நாடாக மாற வேண்டும் என்றால் கண்டுபிடிப்புகள் அதிகமாக இருக்க வேண்டும், கண்டுபிடிப்புகள் அதிகமாக இருந்தால்தான் ஒரு கண்டுபிடிப்புக்கு இன்னொரு கண்டுபிடிப்புக்கு தாயாக மாறும். அதிகமான கண்டுபிடிப்புகளை நிகழ்த்துகின்ற பொழுது நிச்சயமாக நம்முடைய மூளை வலம் பெறுகிறது, அதே நேரத்தில் பொருளாதாரம் பெருகும், தன்னம்பிக்கை உயரும், பிற நாடுகள் நம்மை பார்த்து அறிவால் மிஞ்சியவர்கள் என்று மரியாதை கொடுப்பார்கள்.

  நாசா ஒரு ஆய்வு மேற்கொண்ட பொழுது பிறக்கின்ற அனைத்து குழந்தைகளும் 98 சதவீதம் அறிவியல் அறிஞர்களாக மாறுவதற்கான சாத்திய கூறுகள் இருக்கிறது என்று ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் சிறிது காலம் கழித்து ஆய்வு செய்த பொழுது 40-யிலிருந்து 50 சதவீதமாக குறைகிறது, மீண்டும் 18 வருடங்களுக்கு ஆய்வு செய்யும் பொழுது இரண்டு சதவீதம் தான் அறிவியல் அறிஞர்களாக மாறக்கூடிய சாத்தியக்கூறு இருக்கிறது என்று ஆய்வு அறிக்கையில் தெரிவித்துள்ளனர். பள்ளியில் மாணவர்கள் கல்வி கற்கின்ற பொழுது நிறைய கேள்வி எழுப்புங்கள் ஆசிரியர்களை கண்டு பயப்படாதீர்கள்.

    எந்தப் புத்தகத்தையும் எழுதாத சாக்ரடீஸ் ஏன், எதற்கு, எவ்வாறு, எப்படி என்ற கேள்வி எழுப்ப வேண்டும் என்று கூறியுள்ளார். கல்வியினுடைய அடிப்படை ரகசியம் என்னவென்றால் மதித்தலில் தான் இருக்கிறது. மாணவர்களை கேள்வி கேட்க வேண்டும் என்று ஊக்கப்படுத்த வேண்டும். கேள்வி கேட்பது என்பது சாதாரணமான விஷயம் அல்ல. என்ன விடை வேண்டும் என்று அறிந்தவன் தான் வினாக்களை தொகுக்க முடியும். ஒரு சின்ன விஷயமாக இருந்தாலும் கூட நடைமுறை வாழ்க்கையில் மாற்றக்கூடிய விஷயம், நமக்கு மிகப்பெரிய உதவியை புரியக்கூடிய விஷயம் இருந்தது என்றால் நமக்கு அழகு. கல்வி என்பது இருளிலிருந்து ஒளியை நோக்கி பயணிப்பது என்று அறிஞர் சொல்லியிருப்பார். ஒளி என்பது தெளிவு தான். கல்வியின் அடிப்படை நோக்கம் சிந்தனை செய்ய கற்றுக்கொடுப்பதுதான். அழகாக சிந்திப்பவர்கள் தலைசிறந்த தலைவர்களாக மாறுகிறார்கள். மிகச் சிறந்த தலைவர்கள் நாட்டையே வழி நடத்துவார்கள்.

  கல்வியின் நோக்கம் மதிப்பெண் எடுப்பது மட்டுமல்ல சிந்திக்க கற்றுக் கொள்வது. வாழ்க்கையை எதிர்கொள்வதற்கான பக்குவத்தை கற்றுக்கொள்ள வேண்டும். கல்வி என்பது தன்னம்பிக்கையும் தைரியத்தையும் நமக்கு கொடுக்கும், அதே நேரத்தில் அறிவையும் கொடுக்கும். இந்த இரண்டும் இருப்பவர் தான் வாழ்க்கையில் முன்னேறுவார்கள்.

 ஒரு நாடு முன்னேற வேண்டும் என்றால் அறிவியல் தொழில்நுட்பம் மிக மிக முக்கியம், எல்லை கடந்து சிந்திக்கின்ற பொழுது அறிவியல் தொழில்நுட்பம் வரும். இந்தப் பக்குவம் குழந்தைகளிடம் தான் இருக்கிறது. அப்பொழுது அவர்களுக்கு உதவியாக திகழ்கின்ற பொழுது நிச்சயமாக அரிஸ்டாட்டில் சொன்னவாறு கல்வியினுடைய தேவை கசப்பானவை ஆனால் கனிகளோ மிக சுவையானவை. அந்தக் கனிகளால் தருகின்ற அறிவியல் தொழில்நுட்பத்தை உலகிற்கு நிறைய கண்டுபிடிப்புகளை உருவாக்கித் தருவார்கள்.

 சின்ன சின்ன விஷயங்களை கண்டுபிடித்தாலும் அது மிகப்பெரிய மாற்றத்தை இவ்வுலகிற்கு கிடைக்கும். அதனால் அனைவரும் இளம் தலைமுறைகளுக்கு என்னவெல்லாம் தேவை என்பதை அறிந்து அவர்களை நகர்த்த வேண்டும், அவர்களுக்கு நீங்கள் வழிகாட்டிகளாக திகழ வேண்டும். இந்த சமுதாயத்திற்கான வளர்ச்சியும் இந்த நாட்டிற்கான வளர்ச்சியும் இந்த நாட்டினுடைய பெருமைக்கும் என்ன அறிவியல் தொழில்நுட்பம் கொண்டு செல்கிறார்கள் என்று அறிந்தால் நல்ல மாணவர்களை நீங்கள் உருவாக்க முடியும்.

 நீங்கள் மாணவர்களை மட்டும் உருவாக்கவில்லை அறிவியல் அறிஞர்களையும் உருவாக்குகிறீர்கள். அறிவியல் அறிஞர்களை உருவாக்குவதன் மூலமாக இந்த நாட்டினை பெருமை அடைய செய்யக்கூடும். எனவே இந்த கருத்தரங்கிற்கு வந்திருக்கக்கூடிய அனைவரையும் வாழ்த்துவதோடு, நல்ல அறிவியல் அறிஞர்களை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கரபாண்டியன்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

இப்பயிற்சியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நிர்வாகிகள்  திரு.குணசேகரன், திரு.சுப்பிரமணி, திரு.அச்சுதன், திருமதி.ஜெயசுதா, இளம் தேடி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமதி.செண்பகவல்லி, கல்லூரி முதல்வர் முனைவர்.இன்பவள்ளி, ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திருப்பத்தூர்.