குடும்ப நிலை பற்றி கேட்டறிந்த டிஐஜி! கண்கலங்கிய ஆளிநர்கள்!

குடும்ப நிலை பற்றி கேட்டறிந்த டிஐஜி! கண்கலங்கிய ஆளிநர்கள்!

 பா.ரமேஷ் ஆனந்தராஜ்,

  வேலூர் சரக டிஐஜி முனைவர் எம்.எஸ்.முத்துசாமி இ.கா.ப., அவர்கள் வேலூர் மாவட்டம் குடியாத்தம் உட்கோட்டம் கீ.வ.குப்பம் மற்றும் பரதராமி காவல் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வில் மனுக்கள் மீதான விசாரணை மற்றும் நிலுவையிலுள்ள மனுக்கள் பற்றி கேட்டறிந்தும், நிலுவையிலுள்ள மனுக்களை உடனடியாக விசாரணை மேற்கொண்டு தீர்வு காண உத்தரவிட்டார்.

 வழக்கு கோப்புகளை பார்வையிட்டு துரித நடவடிக்கை எடுக்கவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பதிவான வழக்குகளில் விரைந்து புலன் விசாரணை முடித்து இறுதி அறிக்கையான குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து நடத்தி, குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை பெற்றுத்தருமாறு அறிவுறுத்தினார்.

 மேலும் காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடம் பொதுமக்களிடையே நற்பெயர் பெரும் வகையில் நல்லமுறையில் பணிசெய்ய வேண்டும் எனவும், உதவி ஆய்வாளர்கள் மற்றும் ஆளிநர்களின் குடும்ப நிலை பற்றியும் கேட்டறிந்தார். அப்போது அங்கிருந்த ஆளிநர்கள் கண்கலங்கினர். எங்களைப் பற்றி இதுவரை எந்த உயர் அதிகாரிகளும் விசாரித்ததே கிடையாது என்றனர்.

 பின்னர் கே.வி.குப்பம் காவல் நிலையத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

   இதை தொடர்ந்து ஆந்திராவிலிருந்து கொண்டுவரப்படும் கஞ்சா மற்றும் போதைப்பொருட்களை தடுக்க பரதராமி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட தமிழ்நாடு மற்றும் ஆந்திர எல்லைப்பகுதியிலுள்ள சோதனைச் சாவடியில் ஆய்வு மேற்கொண்டார்.

 சோதனைச்சாவடியில் பணியிலுள்ள காவலர்களிடம்  சந்தேகத்துக்கு இடமான நபர்களையும் வாகனங்களையும்  தணிக்கை செய்து காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்குமாறு அறிவுறுத்தினார்.

  இந்த ஆய்வின் போது கே.வி.குப்பம் வட்ட காவல் ஆய்வாளர் திருமதி. செந்தில்குமாரி உள்ளிட்டோர்¢ உடன் இருந்தனர்.