லாட்ஜி அறைகளில் வைக்கப்பட்ட ரகசிய கேமிரா! முக்கிய குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போலிஸ் திணறல்!

டி.முகமது இர்பான்,
புதுச்சேரி மாநிலம் அதிகளவு சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் இடங்களில் ஒன்றாக உள்ளது. மேலும் அங்கு சுற்றுலா செல்வோர் தங்கும் விடுதிகளில் அறை எடுத்து ஓய்வெடுத்து வருகின்றனர். அந்த வகையில் புதுச்சேரி 100 அடி சாலையில் ஜே.ஜே. தங்கும் விடுதி செயல்பட்டு வருகின்றது.
அந்த விடுதியில் உள்ள அறையில் சுற்றுலா பயணிகளின் அந்தரங்க செயல்களை படம்பிடிக்கும் வகையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டு இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் இது தொடர்பாக அங்கு தங்கியிருந்த உழவர்கரை பகுதியை சேர்ந்தவர் பிரியன் என்பவர் அளித்த புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி வழக்குப்பதிவு செய்து அந்த விடுதியின் உரிமையாளரான இளைய ஆழ்வார், மேலாளர் இருதயராஜ் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய விடுதி ஊழியர்களான ஆனந்து, ஆபிரகாம் ஆகிய 2 பேரும் ஆந்திராவில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனை தொடர்ந்து அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் ஆந்திரா விரைந்துள்ளனர். ஒரு வாரமாக முகாமிட்டுள்ள போலீசார், அவர்களை பிடிக்க முடியாமல் கையை பிசைந்துக் கொண்டிருக்கிறார்களாம்.