சன் பிரதர்ஸ் பிரச்சனை முடிவுக்கு வந்தது! சட்ட அறிக்கையை வாபஸ் பெற்றார் தயாநிதி!
ஜி.சாந்தகுமார்,
தயாநிதி மாறன் தனது சகோதரர் கலாநிதி மாறனுக்கு எதிராக அனுப்பிய நோட்டீஸை திரும்ப பெற்றுள்ளார்.
கருணாநிதியின் சகோதரி மகனும் மத்திய அமைச்சருமான முரசொலி மாறனின் மூத்த மகன் கலாநிதி மாறன் சன் குழுமத்தை நிர்வகித்து வருகிறார். இளைய மகன் தயாநிதி மாறன் அப்பாவைப் போல அரசியல்வாதியாக மத்திய அமைச்சர் போன்ற பதவிகளை வகித்தார்.
தற்போது மத்திய சென்னை மக்களவை உறுப்பினராக இருந்து வருகிறார். 1993ஆம் ஆண்டு சன் குழுமம் நிறுவப்பட்டது. அண்ணன் தம்பி இருவரும் மிகவும் ஒற்றுமையாக இருந்து வந்தனர். எனினும், அண்மையில் மாறன் சகோதரர்களுக்கு இடையே பிரச்னை வெடித்தது.
சன் குழுமத்தில் முரசொலி மாறனின் மனைவியும் தனது தாயாருமான மல்லிகா மாறன் மற்றும் தயாளு அம்மாள் ஆகியோருக்கு இருந்த பங்குகளை கலாநிதி மாறன் 2003ஆம் ஆண்டு முறைகேடாக தனது பெயருக்கு மாற்றிக் கொண்டதாக தயாநிதி மாறன் குற்றம்சாட்டினார்.
இதே போல சுமார் 12 லட்சம் பங்குகளை வெறும் 10 ரூபாய் முக மதிப்பில் கலாநிதி மாறன் தனது பெயருக்கு மாற்றம் செய்துகொண்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
இதுதொடர்பாக கடந்த ஜூன் மாதம் கலாநிதி மாறன், காவேரி கலாநிதி உள்ளிட்டோருக்கு தயாநிதி மாறன் சட்ட நோட்டீஸ் அனுப்பினார். அதில், முரசொலி மாறனின் மறைவுக்கு முந்தைய செப்டம்பா? 15, 2003 நிலவரப்படி அசல் பங்குகளை மீட்டெடுக்க வேண்டும் என்றும், இல்லையெனில் செபியோ, செபி மற்றும் அமலாக்கத் துறைபோன்ற அமைப்புகளிடம் புகார் அளிப்பேன், சிவில் மற்றும் கிரிமினல் நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
இதனிடையே மாறன் சகோதரர்களுக்கு இடையே வெடித்த பிரச்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜூலை 9ஆம் தேதி மத்தியஸ்தம் செய்ததார். இருவரும் இணக்கமாகவும் அமைதியாகவும் செல்லும்படி அவர் அறிவுறுத்தியதாகவும், அதேபோல திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, இந்து என்.ராம் ஆகியோர் இணைந்து சகோதரர்களுக்கு இடையே பிரச்னையை பேசி முடித்து வைத்ததாகவும் தகவல்கள் வெளியானது.
அதாவது 800 கோடி பணம், சென்னை போட் க்ளப்பில் ஒரு ஏக்கர் நிலத்தை தயாநிதி மாறனுக்கு கலாநிதி மாறன் தருவது என அதில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அப்படியிருக்க சகோதரர்கள் இடையே இருந்த எல்லா பிரச்சனைகளும் தீர்க்கப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கலாநிதி மாறனுக்கு எதிராக விடுக்கப்பட்ட சட்டப் பூர்வ நோட்டீஸை அவரது சகோதரர் தயாநிதி மாறன் நிபந்தனையின்றி திரும்பப் பெற்றுள்ளார். இதுதொடர்பாக மாறன் குடும்பத்திற்கு நெருக்கமான ஒருவர், "நோட்டீஸ் திரும்பப் பெறப்பட்டுள்ளது. சகோதரர்களுக்கு இடையேயான அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டுள்ளன," என்று டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு தெரிவித்தார்.
சகோதரர்களுக்கு இடையே சமாதானம் ஏற்பட்டதால் சன் டிவி குழுமத்தில் இருந்த பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் சரியான நேரத்தில் தலையிட்டு இருவரையும் சமாதானம் செய்ததால் பெரிய பிரச்சனை தவிர்க்கப்பட்டது. தயாநிதி மாறன் வழக்கை வாபஸ் பெற்றதால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
2024-25 ஆம் ஆண்டில் சன் டிவி நெட்வொர்க் லிமிடெட் நிறுவனம் சுமார் ரூ.4,544 கோடி வருவாய் ஈட்டியது. மேலும், நிகர லாபம் ரூ.1,654.45 கோடி ஆகும்.

admin
