தயங்கி நின்ற தருணத்தில் தாங்கி பிடித்த முதலமைச்சர்! புதுமைப் பெண் திட்ட பயணாளிகள் உருக்கம்!

தயங்கி நின்ற தருணத்தில் தாங்கி பிடித்த முதலமைச்சர்! புதுமைப் பெண் திட்ட பயணாளிகள் உருக்கம்!

ம.பா.கெஜராஜ்,

புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் உயர்கல்வி பயில மாதந்தோறும் ரூ.1,000/- உதவித்தொகை வழங்க உத்தரவிட்டு,  சிறப்பாக செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு திருப்பத்தூர் மாவட்ட கல்லூரி மாணவிகள் தங்களது உள்ளம் கனிந்த நன்றியை தெரிவித்துள்ளனர்.

 திருப்பத்தூர் மாவட்டத்தில், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு புதுமைப்

பெண் உயர்கல்வி உறுதித்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 23 கல்லூரிகளில் பயிலும் 916 மாணவிகளுக்கு மாதந்தோறும் 1,000/- மாதந்திர உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

 இராண்டாம் கட்டமாக 42 கல்லூரிகளில் பயிலும் 643 மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000/- மாதந்திர உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கரபாண்டியன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

  தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு, கல்வித் தரத்தை உயர்த்துவதற்காக, இல்லம் தேடிக் கல்வி எண்ணும் எழுத்தும் திட்டம், நான் முதல்வன் திட்டம், நம் பள்ளி நம் பெருமை, காலை உணவு திட்டம், வானவில் மன்றம் மற்றும் பள்ளி பார்வை என நாட்டிற்கே முன்னோடித் திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

  ஒரு நாடு செழித்து தன்னிறைவுடன் திகழ வேண்டுமென்றால் நாட்டில் உள்ள மக்கள் கல்வியறிவு பெற்றவர்களாய் இருப்பது மிகவும் அவசியம். முக்கியமாக கல்வி என்பது பெண்களுக்கு மிகமிக முக்கியம். "அழியாச் செல்வம் கல்வி என வள்ளுவரும், கல்வி இல்லாத பெண்கள் களர் நிலம் என பாரதிதாசனும்" கூறியிருக்கிறார்கள். அத்தகைய கல்விச் செல்வத்தை பெண்கள் அனைவரும் பெறச் செய்ய வேண்டும் என்பதற்காக இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

  மேலும் மாணவிகள் பல்வேறு சிரமங்களுக்கு இடையில் அரசுப் பள்ளிகளில் 6-ம் வகுப்பில் படிக்க கூடியவர்கள், தொடர்ந்து 12-ம் வகுப்பு வரை படித்து முடித்து, மேற்படிப்பிற்கு கல்லூரிக்கு செல்ல முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, அவர்களின் வங்கிக் கணக்கிற்கே மாதந்தோறும் ரூ.1,000/- நேரடியாக செலுத்தும் விதமாக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

   இம்மாணவிகள் ஏற்கனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும் இந்த திட்டத்திலும் கூடுதலாக இந்த உதவி பெறலாம்.

  மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதி திட்டம் புதுமைப் பெண் திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை பாரதி பெண்கள் கல்லுரியில் மாண்புமிகு தில்லி முதலமைச்சர் திரு.அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் முன்னிலையில் முதற்கட்டமாக 05.09.2022 அன்று துவக்கி வைக்கப்பட்டு, அதில் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு முதல் கட்டமாக 916 மாணவிகளுக்கு செப்டம்பர் மாதம் முதல் ரூ.1,000ஃ- வழங்கப்பட்டு சுடுகிறது.

இதன் தொடர்சியாக, புதுமைப்பெண் திட்டமானது இரண்டாம் கட்டமாக முதலாமாண்டு பயிலும் மாணவிகள் மற்றும் முதற்கட்டத்தில் விடுபட்ட மாணவிகள் பயனடையும் பொருட்டு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் 08ஃ02ஃ2023 அன்று திருவள்ளூர் மாவட்டத்திலும் அதே நாளில் மற்ற மாவட்டங்களில் அமைச்சர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிகளால் இதர மாவட்டங்களிலும் துவக்கி வைக்கப்பட்டது.

இத்திட்டப்பயனை வழங்குவதற்கு ஏதுவாக திருப்பத்தூர் மாவட்டத்தில் தூய நெஞ்சக் கல்லூரியில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர், கல்லூரி முதல்வர்கள், முதன்மைகல்வி அலுவலர், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் மற்றும் மாவட்ட சமூகநல அலுவலர் தலைமையில் 6 முதல் 12ம் வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வியில் பயின்று உயர்கல்வி பயிலும் கல்லூரி மாணவிகளுக்கு இரண்டாம் கட்டமாக 643 மாணவிகளுக்கு மாதம் ரூ.1000ஃ- மாதாந்திர உதவித்தொகைக்கான வங்கி பற்று அட்டை மற்றும் பெட்டகபை வழங்கபட்டுள்ளது.

  புதுமைப் பெண் திட்டத்தின் மூலம், பெண்களுக்கு உயர் கல்வி அளித்தல், குழந்தை திருமணத்தை தடுத்தல், குடும்பச் சூழ்நிலை மற்றும் வறுமையின் காரணமாக மேற்படிப்பு படிக்க இயலாத மாணவிகளுக்கு பொருளாதார ரீதியாக உதவுதல், பெண் குழந்தைகளின் இடைநிற்றல் விகிதத்தை குறைத்தல், பெண் குழந்தைகளின் விருப்பத்தேர்வுகளின்படி, அவர்களின் மேற்படிப்பை தொடர ஊக்குவித்தல், உயர் கல்வியினால் பெண்களின் திறமையை ஊக்கப்படுத்தி அனைத்து துறைகளிலும் பங்கேற்கச் செய்தல், உயர்கல்வி உறுதித்திட்டத்தின் மூலம் பெண்களுக்கான தொழில் வாய்ப்புகள் அதிகரிக்க வழிவகை செய்தல், பெண்கள் சொந்த காலில் நிற்க வழிவகை செய்யப்படும்.

  கல்வி அறிவும், கலைத்திறனும், தனித்திறமைகளும் தான் யாராலும் அழிக்க முடியாத சொத்துக்கள். பெண்கள் அதனைப் பயன்படுத்தி வாழ்நாள் முழுவதும் தங்களக்கென ஒரு தனித்த ஓர் அடையாளத்துடன் திகழ் வேண்டும் என்பதற்காக இப்புதுமைப் பெண் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    எனவே, மாணவிகள் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் மாதாந்திர உதவித்தொகையை பெற்று தங்களது படிப்புக்கும், உயர்வுக்கும் பயன்படித்திக்கொண்டு, விருப்பமான பணியில் சேர்ந்து சிறப்பாக செயல்பட வேண்டும்.

 உதவித்தொகை பெறும் செல்வி நா.மீனாட்சி என்ற மாணவியின் கருத்து:

  திருப்பத்தூர் மாவட்டத்தில் ஜி.பி. பார்மசி கல்லூரியில் முதலாம் ஆண்டு டி.பார்ம் படித்துவருகிறேன். நான் 12 ஆம் வகுப்பு முடித்துவிட்டு குடும்ப சூழ்நிலை காரணத்தால் ஒருவருடகாலமாக அனுதினமும் வேலைக்கு சென்று வீட்டை பார்த்துக் கொண்டேன். ஆனால் எனக்கு பட்டம் படித்து எனது வீட்டில் முதல் பட்டதாரியாக வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் எனது பெற்றோரும் கூலி வேலை செய்பவர்களே.

  இதனால் உயர்கல்வி என்பது கனவாகவே போய்விடுமோ என்ற மனக்கவலையுடன் இருந்தேன். விழிப்புணர்வு மூலமாக புதுமைப்பெண் திட்டத்தின் மூலமாக ஆறாம் வகுப்பு முதல் பண்ணிரண்டாம் வகுப்பு வரை பயின்ற பெண்குழந்தைகள் உயர்கல்விபயிலும் போது மாதந்திர கல்வி உதவித்தொகையாக ரூபாய் 1000/- வழங்கி வருவதை பற்றி அறிந்தேன். இத்திட்டத்தை செயல்படுத்தியதின் மூலம் தற்போது நான் கல்லூரி சேர்ந்து படித்துக் கொண்டிருக்கிறேன்.

  என்னை போன்று கிராமப்புற பெண் குழந்தைகளுக்கு இத்திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேற்கொண்டு படிக்க இத்திட்டம் மிகவும் உதவியாக உள்ளது மற்றும் பெற்றோர் என் கல்விக்காக செலவிடும் பாரத்தை குறைக்கிறது. உயர்கல்வி என்ற எனது கனவையும் என்னை போன்ற சமூதாயத்தில் நல்ல ஒரு நிலைமைக்கு வரவேண்டும் என்ற எண்ணத்தை நினைவாக்கி புதுமைப்பெண் என்ற உன்னத திட்டத்தை உருவாக்கிய முதலமைச்சர் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

 செல்வி.சி. நிரஞ்சனா என்ற மாணவியின் கருத்து:

 திருப்பத்தூர் மாவட்டம் ரெக்ஸ் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு எ.டி.டி.எல்.டி.படித்துக் கொண்டிருக்கிறேன். நான் புதுமைப் பெண் திட்டத்தில் மாதந்தோறும் ரூபாய் 1,000/- உதவித்தொகை பெற்று வருகிறேன்.

   இந்த1,000/- ரூபாய் இந்தமாதம் கிடைத்த உதவித்தொகையை கொண்டு என் தேர்வு கட்டணத்தை செலுத்தினேன். மேலும் புத்தகம் மற்றும் பேனா போன்ற பொருட்களை வாங்கப் பயனுள்ளதாக இருந்தது. என் கல்வி செலவுகளை நானே பார்த்துக் கொள்வதால் என் வீட்டில் பொருளாதாரம் மேன்மை அடைந்துள்ளது.

  என்னுடைய மருத்துவ மற்றும் போக்குவரத்து செலவுக்கு இந்த உதவித்தொகை மிகவும் பயனுள்ளதாக இருந்தது. என்னுடைய கல்லூரி ஆடைகள் வாங்குவதற்கு மட்டுமல்லாமல், ப்ராஜெக்ட செயல்முறைக்காகவும் இந்த உதவித்தொகை பயன்பட்டுள்ளது. இது எனக்கு மிகவும் மகிழ்சியாக உள்ளது. இந்த புதுமைப்பெண் திட்டத்தை அறிமுகப்படுத்திய முதலமைச்சர் ஐயா அவர்களுக்கு நான் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

 செல்வி.ச.கஸ்தூரி என்ற மாணவியின் கருத்து:

 நான் விசுவாசம்பட்டி கிராமத்தில் வசித்து வருகிறேன். எனக்கு அப்பா இல்லை. அம்மா தினமும் கூலி வேலைக்கு சென்று என்னை படிக்க வைத்துவருகிறார். திருப்பதூரில் அக்ஸிலியம் கல்லூயில் ஐடிஐ தொழிற்பயிற்சி நிறுவனத்தில் வயர் மேன் பிரிவில் பயின்று வருகிறேன். நான் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவள். கல்லூரி படிப்பை தொடர முடியுமா, மேலும் கல்லூரியில் தேர்வு கட்டணம் மற்றும் புத்தகம் வாங்குவதற்க்கு தேவையான பணம் அம்மாவிடம் வாங்க தயங்கி நின்ற தருணமும் உண்டு.

   கல்லூரியில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவிகள் புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் மாதமாதம் ரூபாய் 1,000/- பெற்று பயன் பெறலாம் என்ற செய்தியை பத்திரிக்கை செய்தியில் பார்த்தேன்.

 பின்னர் நான் இத்திட்டதில் பதிவு செய்து பயன் பெற்றும் வருகிறேன். என் அம்மாவிடம் படிப்பிற்கான பணம் கேட்பதை தவிர்த்து விட்டு என் படிப்பிற்கான தேவையை இத்திட்டத்தின் வழியாக வரும் உதவித்தொகையின் மூலம் நானே பார்த்துக் கொள்கிறேன்.

 கண்டிப்பாக நானும் வருங்காலத்தில் அனைவரும் திரும்பி பார்க்கும் புதுமைப்பெண்ணாக வளம் வருவேன். இத்திட்டத்தை அறிமுகப்படுத்திய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஐயா அவர்களுக்கு நன்றி.

 செல்வி.அ.பூமிகா என்ற மாணவியின் கருத்து:

 நான் விவசாய குடும்பத்ததை சார்ந்த முதல் பட்டதாரிபெண். என் அப்பா தினமும் விவசாயம் செய்துவரும் பணத்தில் தான் குடும்ப செலவை பார்த்து வருகிறார். நான் அரசு பள்ளியில் பயிலும் வரை என் படிப்பிற்கு எவ்வித செலவும் இருந்ததில்லை. பண்ணிரண்டாம் வகுப்பு முடித்தவுடனே கல்லூரிக்கு சென்று படிக்க வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் ஆழமாக பதிந்தது.

  ஆனால் அதற்குண்டான வசதி இல்லை. திருமணம் செய்து வைத்து விடலாம் என்று எனது அப்பாவும் கூறிகொண்டே இருந்தார்.

   எனது கிராமத்தில் ஒரு விழிப்புணர்வு நிகழ்வில் ஊர்நல அலுவலர் மற்றும் விரிவாக்க அலுவலர் குழந்தை திருமணத்தை பற்றி விழிப்புணர்வு கொடுத்து விட்டு, பின்னர் புதுமைப் பெண் திட்டத்தை பற்றி கூறியது எனது மனதில் ஆழமாக பதிந்தது. உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதமாதம் ரூ.1,000/- மாண்புமிகு முதலமைச்சர் ஐயா வழங்குகிறார் என்பதை கூறினார்கள்.

   உடனே நான் என் அப்பாவிடம் பேசி கல்லூரி சென்று பயிலுவதை பற்றியும் மேலும் புதுமைப் பெண் திட்டத்தைப் பற்றியும் கூறி நான் விடுதியில் தங்கி கல்லூரி படிப்பை தொடர்ந்தேன்.

   புதுமைப்பெண் திட்டத்தை பற்றி அறிந்து கொண்ட நான் கல்லூரி மூலம் இத்திட்டத்தில் பதிவு செய்தேன். கடந்த மாதம் ஊக்கத்தொகையையும் பெற்றேன். இவ்வுதவிதொகையின் மூலம் விடுதி உணவு கட்டணம் கடந்த மாதம் செலுத்திவிட்டேன். அவ்வப்போது கல்லூரி பயிலும் போது ஏற்படும் செலவுகளையும் பார்த்துக்கொள்வேன்.

   நான் ஒரு நல்ல வேலைக்கு கண்டிபாக சென்று நாளை வளரும் சமுதாயத்திற்க்கு முன் உதாரணமாக நிகழ்வேன். மேலும் என் அப்பா போன்று என் தேவைகளை பூர்த்தி செய்துவரும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி.                                                 

  தொகுப்பு:

   திரு.சு.மோகன்,செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்(மு.கூ.பொ),   

  திரு.மு.ஜனார்த்தனன்,உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்(செய்தி),

  செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திருப்பத்தூர்.