மான் கறி தின்ன முயன்ற தெரு நாய்கள்!

மான் கறி தின்ன முயன்ற தெரு நாய்கள்!

 கே.ஏ.ஜெகதீஸ்வரி,

 ராஜபாளையத்தில் தெரு நாய்கள் கடித்ததில் படுகாயம் அடைந்த புள்ளிமான் மீட்கப்பட்டு வனத்துறை சார்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் செண்பக தோப்பு சாலையில் உள்ள வனப்பகுதிக்குள் இருந்து தண்ணீர் குடிப்பதற்காக புள்ளி மான் வெளியேறி உள்ளது. மான் சுற்றி திரிந்ததை பார்த்த தெரு நாய்கள் அதை வேட்டையாட முயன்றுள்ளது. தெரு நாய்கள் கடித்ததில் மானின் உடலில் பல்வேறு இடங்களில் ரத்த காயம் ஏற்பட்டுள்ளது.

 நாய்களிடம் இருந்து தப்பித்த மான் அருகே இருந்த விவசாய தோப்பின் அறைக்குள் தஞ்சம் புகுந்துள்ளது. இதை பார்த்த தோப்பின் உரிமையாளர் வனத்துறையினருக்கும், தீ அணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்துள்ளார்.

 அவர்கள் வந்து பார்த்த போது சுமார் 9 வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளி மான் அறைக்குள் இருந்துள்ளது. அதை வெளியேற்ற முயன்ற போது காலில் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததால் மானால் நிற்க முடியவில்லை என தெரிய வந்தது.

 ஆகவே கயிறு கட்டி அறைக்குள் இருந்து மானை வெளியேற்றிய வனத்துறையினர் மற்றும் தீ அணைப்பு துறையினர், தனியார் கால்நடை மருத்துவர் மூலம் முதலுதவி அளித்தனர். பின்னர் மானை மீட்ட வனத்துறையினர், வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

அங்கு காயமடைந்த மானுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. காலில் ஏற்பட்ட காயம் சரியான பிறகு மான் மீண்டும் வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விடப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.