அக்கறை இல்லாத அதிமுக ஆட்சி! பூண்டி கலைவாணன் குற்றச்சாட்டு!

அக்கறை இல்லாத அதிமுக ஆட்சி! பூண்டி கலைவாணன் குற்றச்சாட்டு!

க.பாலகுரு,

கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சி மக்கள் நலனில் அக்கறை இல்லாத ஆட்சியாக இருந்ததாக திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் சேமிப்பு கிடங்கு திறப்பு விழாவில் குற்றச்சாட்டு.

திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி தாலுகாவிற்குட்பட்ட பெருந்தரக்குடியில் 2021 -22 ஆம் ஆண்டு சட்டப்பேரவை நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி ரூ.94 லட்சம் மதிப்பீட்டில் 500 மெட்ரிக் டன் சேமிப்புக் கிடங்கு புதிதாக கட்டப்பட்டுள்ளது. இதனை இன்றைய தினம் தமிழக முதலமைச்சர்  காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

  இதே போல 5 கோடி 60 லட்சம் மதிப்பீட்டில் வலங்கைமானில் 500 மெட்ரிக் டன் சேமிப்பு கிடங்கு, கோட்டூர் வட்டாரம் மேல்நத்தம் பகுதியில் 1000 மீட்டர் டன் சேமிப்பு கிடங்கு, நீடாமங்கலம் வட்டாரம் காலாஞ்சி மேடு பகுதியில்  2000 மெட்ரிக் டன் சேமிப்பு திட்டங்களை தமிழக முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

இதனையொட்டி பெருந்தரக்குடி ஊராட்சி மன்ற தலைவர் மதிவாணன் தலைமையில் நடைபெற்ற திறப்பு விழா நிகழ்ச்சியில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி  கலைவாணன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி குத்து விளக்கேற்றி மக்கள் பயன்பாட்டுக்கு அர்பணித்தார்.

நிகழ்ச்சியின் போது சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் பேசுகையில்..

கடந்த அதிமுக ஆட்சியில் குளிக்கரை ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்த போதும் எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. ஆனால் தற்பொழுது திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் அவர்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு வருகிறது. கடந்த பத்தாண்டுகால ஆட்சியில் மக்கள் பிரச்சினைகளை குறித்து கவலைப்படவே இல்லை. மக்கள் நலனில் அக்கறை இல்லாத ஆட்சியாக கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சி இருந்தது என குற்றம் சாட்டினார்.

 இந்நிகழ்ச்சியில் கொரடாச்சேரி ஒன்றியக் குழு துணை தலைவர் பாலச்சந்தர், வேளாண் துணை இயக்குனர் சாருமதி, உதவி பொறியாளர் கலைமணி, வேளாண் அலுவலர் மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.