சார் ப்ளீஸ் அந்த அறிவிப்பு பலகையை வையுங்களேன்!

ஜே.ஜே.எம்.ரபிக் ராஜா,
தேனி மாவட்டம் பெரியகுளம் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கும்பக்கரை சுற்றுலா அருவி தினந்தோறும் உள்ளூர் மற்றும் வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்து அருவியில் நீராடி அங்கு உள்ள இயற்கை வளங்களை கண்டு களித்தும் வருகின்றனர்.
கடந்த பல மாதங்களுக்கு மேலாக மதுரை- திண்டுக்கல் செல்லும் நெடுஞ்சாலையில் இருந்து கும்பக்கரை செல்லும் பாதையில் வனத்துறையினரால் ஒரு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது.
அதில் திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் அருவியில் குளிக்க இயலாத சூழ்நிலை போன்றவற்றை உணர்த்தும் விதமாக பொதுமக்களுக்கு பார்வைக்கு வைக்கப்பட்டு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
ஆனால் தற்போது அந்த நிலை இல்லை. பல மாதங்களுக்கு முன்னால் நெடுஞ்சாலை துறையின் சாலை விரிவாக்க பணியின் பொழுது அந்த அறிவிப்பு பலகை எவ்வித முன்னறிவிப்புமின்றி அகற்றப்பட்டதாக சுற்றுலா பயணிகளால் கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்றுவரை அந்த அறிவிப்பு பலகை மீண்டும் நிறுவப்படாமல், அதே இடத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் கும்பக்கரை அருவியின் தற்காலிக சூழ்நிலைகள் குறித்தும் எந்தவித அறிவிப்பும் இல்லாமல் இருக்கிறது.
இதனால் பொதுமக்கள் அருவி வரை சென்று ஏமாற்றத்துடன் திரும்பி வரக்கூடிய சூழ்நிலை உள்ளதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு வீண் அலைச்சல் மற்றும் பொருள் விரையம் அதிகமாக ஆகின்றது. ஆகையால் அந்த அறிவிப்பு பலகையை உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அதே இடத்தில் நிறுவி அன்றாட சூழ்நிலைகளை அதில் அறிவிக்குமாறு தாழ்மையுடன் சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைக்கின்றனர்.