வேலூரில் 3.70 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள்!கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் செய்யப்பட்டது!

ம.பா.கெஜராஜ்,
2021 - 23 ஆகிய இரண்டு நிதி ஆண்டுகளில் வேலூர் மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 3.70 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது!
இந்த திட்டத்தில் பயனடைந்த விவசாயிகள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்தனர் !!
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களிலும் 5 ஆண்டுகளில் ஒட்டுமொத்த வேளாண் வளர்ச்சி மற்றும் தன்னிறைவு அடைந்திடும் வகையில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் 23.05.2022 அன்று சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு மரக்கன்றுகள் மற்றும் பழச்செடிகளை வழங்கினார்.
இத்திட்டத்தினை செயல்படுத்திட 2021 - 22 ஆம் ஆண்டில் 1,997 கிராம பஞ்சாயத்துகள் தெரிவு செய்யப்பட்டு ரூபாய் 227.059 கோடியும், 2022- 23 ஆம் ஆண்டில் 3,204 கிராம பஞ்சாயத்துகள் தெரிவு செய்யப்பட்டு ரூபாய் 300 கோடியும்20223 ஆம் ஆண்டில் இத்திட்டமானது 324 கிராம பஞ்சாயத்துகளில் ரூபாய் 300 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்ப்பட்டுள்ளது.
புதிய நீர் ஆதாரங்களை உருவாக்கி, தரிசு நிலங்களை சாகுபடிக்கு ஏற்ற நிலங்களாக மாற்றி, சாகுபடி பரப்பினை அதிகரித்தல், வேளாண் உற்பத்தி மற்றும் உற்பத்தி திறனை அதிகரித்தல் உழவர்களின் பொருளாதார நிலையினை மேம்படுத்துதல் போன்றவை இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
மாநில அரசு திட்டத்தின் 100 சதவீத மான்யத்துடன் சமுதாய நீர் ஆதாரங்களை உருவாக்குதல், ஒருங்கிணைக்கப்பட்ட வேளாண் இயந்திரமயமாக்கும் துணை இயக்க திட்டம், தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம், முதலமைச்சரின் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் திட்டம், பிரதம மந்திரி வேளாண் நீர் பாசன திட்டம், ஒரு துளி நீரில் அதிக விளைச்சல் துணைநிலை நீர் மேலாண்மை திட்டம் ஆகிய ஒன்றிய அரசின் பங்களிப்பு திட்டங்களின் செயல்பாடுகள் அந்தந்த திட்டங்களில் உள்ள நிதி ஆதாரம் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளின்படியும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதில் அனைத்து இனங்களுக்கும் 100 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட கிராமங்களில் பாசன பரப்பு இல்லாத தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்புகளில் சமுதாய நீர் ஆதாரத்தை உருவாக்குதல், பண்ணை குட்டைகளை அமைத்தல், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சிறுபாசன குளங்கள், ஊரணிகள் மற்றும் வரத்துக்கால்வாய்களை தூர்வாரி மேம்படுத்துதல் போன்ற பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
2021 - 22 ஆம் ஆண்டு
வேலூர் மாவட்டத்தில் 2021 - 22 ஆம் ஆண்டில் 317 குக்கிராமங்களை உள்ளடக்கிய 43 கிராம பஞ்சாயத்துகளில் 390.26 ஏக்கர் பரப்பளவில் 22 தொகுப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு 293 விவசாயிகள் பயன்பெறும் வகையில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி வேளாண்மை துறையின் சார்பில் ரூ.12.90 லட்சம் மதிப்பில் 25,800 தென்னங்கன்றுகளும், ரூ 2.42 லட்சம் மதிப்பில் 645 வரப்பு ஓரங்களில் பயறு வகை சாகுபடியும், ரூ 1.61 லட்சம் மதிப்பில் 215 கைத்தெளிப்பான்களும், ரூ 30.50 லட்சம் மதிப்பில் 1,007 விசைத்தெளிப்பான்களும், ரூ13.24 லட்சம் மதிப்பில் 1,555 நபர்களுக்கு தார்பாலின்களும், ரூ.25.68 லட்சம் மதிப்பில் 1,267 பண்ணை கருவிகள் அடங்கிய தொகுப்பும், ரூ.2.07 லட்சம் மதிப்பில் தகவல் பரிமாற்றம் மற்றும் திட்ட செயலாக்கம் என ரூ.88.42 லட்சம் மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.
தோட்டக்கலைத் துறையின் சார்பில் ரூ.2.42 லட்சம் மதிப்பில் வீட்டுத் தோட்டம் அமைத்தல், ரூ. 4.30 லட்சம் மதிப்பில் காய்கறி சாகுபடி ஊக்குவித்தல், ரூ. 2.15 லட்சம் மதிப்பில் வரப்பு ஓரங்களில் பழச்செடி மற்றும் மரக்கன்றுகள் நடவு செய்தல், ரூ. 3.44 லட்சம் மதிப்பில் பழச்செடி தொகுப்புகள் விநியோகம், ரூ. 28.26 லட்சம் மதிப்பில் பல்லாண்டு தோட்டக்கலை பயிர்கள் பரப்பு விரிவாக்கம், ரூ. 2 லட்சம் மதிப்பில் காளான் வளர்ப்பு என 42.57 லட்சம் மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.
வேளாண் பொறியியல் துறையின் சார்பில் ரூ.89.52 லட்சம் மதிப்பில் 22 ஆழ்துளை கிணறுகள், ரூ.9.61 லட்சம் மதிப்பில் 10 பண்ணை குட்டைகள், ரூ. 19.55 லட்சம் மதிப்பில் 23 பவர் ட்ரில்லர் இயந்திரங்கள், ரூ. 23.91 லட்சம் மதிப்பில் 43 குளங்கள், ஊரணிகள் மற்றும் வரத்துக்கால்வாய்கள் தூர்வாருதல் என ரூ. 142.59 லட்சம் மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
2022 -23 ஆம் ஆண்டு
வேலூர் மாவட்டத்தில் 2022 - 23 ஆம் ஆண்டில் 271 குக்கிராமங்களை உள்ளடக்கிய 57 கிராம பஞ்சாயத்துகளில் 293.10 ஏக்கர் பரப்பளவில் 20 தொகுப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு 230 விவசாயிகள் பயன்பெறும் வகையில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி வேளாண்மை துறையின் சார்பில் ரூ.10.25 லட்சம் மதிப்பில் 17,100 தென்னங்கன்றுகளும், ரூ 5.4 லட்சம் மதிப்பில் 1,725 பயனாளிகளுக்கு திரவ உயிர் உரங்கள் விநியோகம், ரூ 12 லட்சம் மதிப்பில் 250 விசைத்தெளிப்பான்களும், ரூ. 3.08 லட்சம் மதிப்பில் தரிசு நில தொகுப்பு பதிவு செய்தல், தகவல் பரிமாற்றம், திட்ட செயலாக்கம் மற்றும் திட்ட கையேடு தயாரித்தல் என ரூ.30.73 லட்சம் மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.
தோட்டக்கலைத் துறையின் சார்பில் ரூ.10.91 லட்சம் மதிப்பில் சந்தை காய்கறிகளின் சாகுபடியை ஊக்குவித்தல், ரூ. 4.82 லட்சம் மதிப்பில் பழச்செடி தொகுப்புகள் விநியோகம், ரூ. 1.71 லட்சம் மதிப்பில் காய்கறி விதை தளைகள் விநியோகம், ரூ. 31.50 லட்சம் மதிப்பில் பல்லாண்டு தோட்டக்கலை பயிர்கள் பரப்பு விரிவாக்கம், ரூ. 2 லட்சம் மதிப்பில் காளான் வளர்ப்பு என 50.94 லட்சம் மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.
வேளாண் பொறியியல் துறையின் சார்பில் ரூ.5.50 லட்சம் மதிப்பில் 4 ஆழ்துளை கிணறுகள், ரூ.8.40 லட்சம் மதிப்பில் 6 பண்ணை குட்டைகள் என ரூ. 13.90 லட்சம் மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
2021 - 23 ஆகிய இரண்டு நிதி ஆண்டுகளில் வேலூர் மாவட்டத்தில் மட்டும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 100 கிராம பஞ்சாயத்துகள் தேர்வு செய்யப்பட்டு அந்த கிராமங்களில் உள்ள தரிசு நிலங்களை மேம்படுத்தும் வகையில் இதுவரை ரூ. 3.70 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காட்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்ட விண்ணம்பள்ளி கிராமத்தில் 26 விவசாயிகள் ஒன்றிணைந்த தரிசு நில தொகுப்பில் ரூ.30.69 லட்சம் மதிப்பில் தரிசு நிலத்தில் உள்ள புதர்களை அகற்றி கரைகள் அமைத்தல், ஆழ்துளை கிணறு, பண்ணை குட்டை, கச்சா ரோடு அமைத்தல், மாமரக் கன்றுகள் நடுதல் என பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த விவசாய தொகுப்பை சார்ந்த விவசாய குழுவின் தலைவர் திரு.முனிரத்தினம் அவர்கள் தெரிவித்ததாவது.
என்னுடைய பெயர் முனிரத்தினம். எனக்கு சொந்தமான 2 ஏக்கர் புஞ்சை நிலம் காட்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள விண்ணம்பள்ளி கிராமத்தில் உள்ளது. என்னுடைய நிலம் ஒரு 25 வருஷமா தரிசு நிலமாக இருந்தது. இந்த நிலத்தில் எதுவும் விவசாயம் செய்யாமல் இருந்தது.
இந்த நிலையில் எங்கள் கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் விவசாயத்தை அதிகரிக்கிற வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாக கேள்விப்பட்டேன். சம்பந்தப்பட்ட விவசாய அதிகாரிகளை சென்று சந்தித்து இதுகுறித்து கேட்டபோது அவர்கள் என்னுடைய நிலம் மற்றும் அருகாமையில் உள்ள நிலங்களை சேர்த்து விவசாயிகள் ஒரு குழுவாக பதிவு செய்து வந்தால் இந்த தரிசு நிலங்களை மேம்படுத்த அரசின் சார்பில் 100 சதவீத மானியத்தோட அனைத்து உதவியும் செய்வதாக சொன்னார்கள்.
அதன்படி என்னுடைய நிலத்துக்கு அருகாமையில் இருக்கிற 26 நில விவசாயிகளை இணைத்து மொத்தமுள்ள 36.18 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த தரிசு நிலங்கள் எல்லாம் ஒன்றாக சேர்த்து தரிசு நிலத் தொகுப்பு குழு அமைச்சு தமிழ்நாடு பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்து பிறகு அரசுக்கு விண்ணப்பித்தோம். இதன் அடிப்படையில் தரிசு நிலங்களை மேம்படுத்துவதற்காக ஆழ்துளை கிணறு, சோலார் மின் இணைப்பு வசதி, நுண்ணீர் பாசன வசதி இதையெல்லாம் அரசாங்கமே செய்து கொடுத்தார்கள்.
மேலும் இந்த தரிசு நிலத் தொகுப்பிற்கு அருகிலேயே உள்ள ஒரு பண்ணை குட்டையை தூர்வாரி, வண்டி பாதை அமைத்து கொடுத்து அந்த பணிகளும் தற்போது முடிந்திருக்கிறது. தரிசு நிலத்தில் இருந்த புதர்களை எல்லாம் அகற்றி நிலம் சீர் செய்யப்பட்டது. இப்போது நான் என்னுடைய 2 ஏக்கர் நிலத்தில் மரக்கன்றுகளை நடவு செய்து கொண்டிருக்கிறேன். சுமார் 25 வருஷமா எதுவுமே செய்யாமல் இருந்த ஒரு நிலத்தை மீண்டும் விவசாய நிலமாக மாற்றியதிற்காக மிக அருமையான ஒரு திட்டத்தை கொண்டு வந்து எங்களுக்கெல்லாம் உதவி புரிஞ்சு விவசாயத்தையும் செழிக்க வைக்க உதவிகரமாக இருந்த மாண்புமிகு முதலமைச்சருக்கு எங்களுடைய நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
கீ. வ. குப்பம் ஊராட்சி ஒன்றியம் நாவல் கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் பயனடைந்துள்ள விவசாயி திரு. வேலு அவர்கள் தெரிவித்ததாவது,
என்னுடைய பெயர் வேலு. என்னிடம் சுமார் 3.6 ஏக்கர் நிலம் இருந்து வருகிறது. கடந்த பல வருடங்களாக அந்த நிலத்தில் நான் விவசாயம் ஏதும் செய்யவில்லை. தற்பொழுது அரசு அறிவித்துள்ள கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் விவசாய பணிகளை மேற்கொள்ள 100% மானியம் வழங்குவதாக கேள்விப்பட்டு அது தொடர்பாக விவரங்களை சேகரித்து எங்கள் பகுதியில் உள்ள 10 விவசாயிகளின் 15 ஏக்கர் நிலங்களை ஒன்றிணைத்து விவசாய குழு அமைத்தோம்.
பின்னர் வேளாண்மை துறை அதிகாரிகளை சந்தித்து கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் விவசாய பணிகளை மேற்கொள்ள விண்ணப்பித்தோம். அதன் அடிப்படையில் எங்களுடைய தரிசு நிலங்களில் இருந்த புதர்களை அகற்றி நிலங்களை சமப்படுத்தி விவசாயம் மேற்கொள்ள ஏதுவாக ஆழ்துளை கிணறு வசதியும், நுண்ணீர் பாசன வசதியும் ஏற்படுத்தப்பட்டது.
மேலும் சோலார் மின் இணைப்பு வசதி ஏற்படுத்தப்பட்டு முழுநேரம் விவசாயம் செய்வதற்கு வழிவகை செய்யப்பட்டது. பயிரிடுவதற்காக குதிரைவாலி, ராகி, உளுந்து விதைகள், தென்னை நாற்று, மாமரக் கன்றுகள் போன்ற விவசாய இடு பொருட்களும் இலவசமாக வழங்கப்பட்டன. பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிப்பதற்காக விசைத்தெளிப்பான்களும் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல ஆண்டுகளாக தரிசு நிலமாக இருந்த எங்களுடைய நிலங்கள் தற்பொழுது அரசின் முக்கியமான இந்த திட்டத்தின் காரணமாக விளை நிலங்களாக மாற்றமடைந்து வருகின்றன. என்னுடைய 3.66 ஏக்கர் நிலத்தில் தற்பொழுது குதிரைவாலி பயிரிட்டுள்ளேன்.
கிராமங்களின் முக்கிய தொழிலான இந்த விவசாயத்தையும் பொருளாதாரத்தில் நலிந்து கொண்டிருக்கும் விவசாயிகளை காப்பாற்றும் வகையிலும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தை செயல்படுத்திய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் தமிழ்நாடு அரசிற்கும் இந்த திட்டங்களை எல்லாம் நிறைவேற்றி எங்களுடைய நிலங்கள் எல்லாம் இன்று செழிப்போடு இருப்பதற்கு உதவி புரிந்த வேளாண்துறை அதிகாரிகளுக்கும் எங்களுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
தொகுப்பு
அ.சுகுமார்
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்
நா.கோ.நந்தகுமார்
உதவி மக்கள் தொடர்பு அலுவலர்(செய்தி)
வேலூர் மாவட்டம்.