இருட்டிலும் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.2.14 லட்சம்! காட்பாடி ரிஜிஸ்தர் ஆபீசில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு!

இருட்டிலும் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.2.14 லட்சம்! காட்பாடி ரிஜிஸ்தர் ஆபீசில்  லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு!

 கு.அசோக்,

காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அதில் கணக்கில் வராத ரூ.2.14 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

வேலூர்மாவட்டம்,காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தை மையப்படுத்தி அடிக்கடி புகார்கள் எழுந்தபடி இருந்தது. இந்நிலையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.ரூ.2 லட்சத்து 14 ஆயிரம் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

   காட்பாடி சார்பதிவாளர் அலுவலகத்தில், நிலம் விற்பது, வாங்குவது, பாகப்பிரிவினை ஆகியவற்றுக்கு பத்திரப்பதிவுகளும் திருமண பதிவு என தினந்தோறும் பத்திரபதிவுகள் நடைபெற்று வருகிறது. காட்பாடி சார்பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளராக (பொறுப்பு) நித்தியானந்தம் பணிபுரிந்து வருகிறார்.

  இங்கு பத்திரப்பதிவு செய்ய கூடுதல் பணம் வசூலிப்பதாக வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் சென்ற வண்ணம் இருந்தது. அதன் அடிப்படையில் நேற்று மாலை 6 மணிக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார்  திடீரென காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் நுழைந்தனர்.

   உள்ளே நுழைந்தவுடன் உள்ளே இருக்கும் ஊழியர்கள், அதிகாரிகள், பத்திர பதிவு செய்ய வந்தவர்கள் அனைவரும் வெளியே செல்ல விடாமல் கதவு சாத்தப்பட்டது. அப்போது  ஆளுங்கட்சி கவுன்சிலர் ஒருவரும் உள்ளே சிக்கிக்கொண்டார்.

   மேலும் வெளியில் இருந்து யாரும் உள்ளே வரக்கூடாது என்பதற்காக வெளியில் இருந்த கேட் மூடப்பட்டது. உள்ளே வேலூர் லஞ்ச ஒழிப்பு  துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் தலைமையில் இன்ஸ்பெக்டர் விஜய் உள்பட ஏழு பேர் கொண்ட குழுவினர் சோதனை செய்தனா.¢ மேலும் அங்கிருந்த அதிகாரி மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.

 இந்த நிலையில்  காட்பாடி பகுதியில் மின் வினியோகம் நிறுத்தப்பட்டது. இதனால் சோதனைக்கு சென்ற போலீசார் அவதி அடைந்தனர். பின்னர் மீண்டும் மின்விளக்கு வசதி வந்தவுடன் சோதனை தொடர்ந்தனர். இந்த சோதனையை கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 14 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த லஞ்ச ஒழிப்பு சோதனையானது நள்ளிரவு முடிந்தது.

காட்பாடி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தியது காட்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.