நாட்டின் மீது பற்றுள்ள ஒரே தலைவர் பிரதமர் மோடி மட்டுமே! டாக்டர் பாரிவேந்தர் எம்.பி பேச்சு!

நாட்டின் மீது பற்றுள்ள ஒரே தலைவர் பிரதமர் மோடி மட்டுமே! டாக்டர் பாரிவேந்தர் எம்.பி பேச்சு!

பா.சுரேஷ்,

நாட்டின் மீது பற்றுள்ள ஒரே தலைவர் பிரதமர் மோடி மட்டுமே என்று எஸ். ஆர். எம் கல்விக்குழும வேந்தர் அவரது பிறந்தநாள் நிகழ்சியின் போது பேசினார்.

  டாக்டர் பாரிவேந்தர் எம்.பி எஸ்ஆர்எம் கல்வி குழுமங்களின் நிறுவனர் மற்றும் வேந்தரும், தமிழப்பேராயத்தின் புரவலர் மற்றும் பெரம்பலூர் மக்களவை தொகுதி உறுப்பினருமான  டாக்டர் டி. ஆர்.பாரிவேந்தரின் 84வது  பிறந்த நாள் விழா எஸ்ஆர்எம் தமிழப் பேராயம் சார்பில் சேவை திருநாள் முப்பெரும் விழாவாக 3 நாள்(2023 செப் 21-23) நடைபெற்றது. விழாவில் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பங்கேற்று விழா மலரினை  வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார். விழாவை யொட்டி சிறப்பு பட்டிமன்றம், கவியரங்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.

 காட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம் வளாகத்தில் அமைந்துள்ள தி.பொ.கணேசன் கலையரங்கில் நடைபெற்ற இவ்விழாவின் தொடக்க நாள் நிகழ்வாக புலவர் மா.ராமலிங்கம் நடுவராக விளங்க டாக்டர் பாரிவேந்தரின் நிலைத்த புகழுக்கு பெரிதும் காரணம் கல்வி சார்ந்த பணிகளா? சமூகம் சார்ந்த பணிகளா? என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது.

கல்வி சார்ந்த பணிகளே!என கவிஞர் மு.ராகவேந்திரன்,கவிஞர் த.கோ.சதாசிவம், முனைவர் வேதநாயகி ஆகியோரும்,சமூகம் சார்ந்த பணிகளே!என முனைவர் மா. அன்பு, பேராசிரியர்கள் மதுக்கூர் ராமசந்திரன், அன்னலட்சுமி ஆகியோரும் வாதடினர்.

   இரண்டாம் நாள் நிகழ்வாக மேனாள் அரசவைக் கவிஞர் மற்றும் திரைப்படப் பாடலாசிரியர் முத்துலிங்கம் தலைமையில், திண்டிவனம் கம்பன் அறக்கட்டளை பொதுச்செயலாளர் கவிஞர் ஞானஜோதி சரவணன் முன்னிலையில் 'பாரிவேந்தரின் பன்முகத் திறன்' என்ற தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது.

   இதில் கல்வி மேம்பாடு என்ற தலைப்பில் கவிஞர் இரா.ரவி, தமிழ் வளர்ச்சி என்ற தலைப்பில் கவிஞர் இரா.செந்தாமரை, மருத்துவ சேவை என்ற தலைப்பில் கவிஞர் பா.யாமினி, சமூகதொண்டு என்ற தலைப்பில் கவிஞர் சு.சூரஜ், அரசியல் ஆளுமை என்ற தலைப்பில் கவிஞர் அஜித் குமார், ஈகைத் திறம் என்ற தலைப்பில் மாணவக் கவிஞர் வெ. மிருதுளா தேவி ஆகியோர் கவிதை பாடினர்.

 இதில் சிறந்த கவிதைகளுக்கு எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் துணைவேந்தர் முனைவர் சி.முத்தமிழ்ச்செல்வன் பரிசு வழங்கினார்.

 நிகழ்வின் இறுதியாக வாழ்த்தரங்கம் எஸ்ஆர்எம் கல்லூரி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் வளாக நிர்வாகி இரா. அருணாச்சலம் வரவேற்றார்.எஸ்ஆர்எம் தமிழப் பேராயம் தலைவர் முனைவர் கரு. நாகராஜன் அறிமுகஉரை நிகழ்த்தினார்.

   விழாவிற்கு தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமை வகித்து வேந்தரின் பிறந்த நாளை யொட்டி வேந்தர் 84 என்ற மலரினை வெளியிட முதல் பிரதியினை டாக்டர். மாதுரி சத்தியநாராயணன்  பெற்றுக்கொண்டு மலரின் சிறப்பு அம்சங்களை விளக்கி பேசினார்.

இதில் தவத்திரு மயிலம் சிவஞான பாலய சுவாமிகள் முன்னிலை உரையும்,  தாளாளர் ஹரிணி ரவி தொடக்க உரையும் நிகழ்த்தினர்.

   நிகழ்ச்சியில் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் டாக்டர் பாரிவேந்தருக்கு பொன்னாடை மற்றும் சந்தன மாலை அணிவித்து வாழ்த்தி பேசுகையில், பல்வேறு பகுதிகளில் உள்ள 22 சைவ ஆதினங்களை அழைத்து எஸ்ஆர்எம் ல் சைவ சமய மாநாடினை வேந்தர் பாரிவேந்தர் நடத்தினார். அதில் ஆதினங்கள் சார்பாக பாரிவேந்தருக்கு முதன் முதலாக செங்கோல் வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து தான் டெல்லியில் ஆதினங்கள் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடிக்கு செங்கோல் வழங்கினார்கள்.

   இந்தியாவில் தாழ்ந்து கிடக்கும் மக்களை காணும்போது அவர்களை உயர்த்தும் சக்தி கல்விக்கு மட்டுமே உள்ளது, எனவே அனைவருக்கும் கல்வி வழங்க வேண்டும் என்று சுவாமி விவேகானந்தர் கூறினார், அந்த கல்வி வழங்கும் பணியை பாரிவேந்தர் செய்து வருகிறார். மக்கள் சேவை, கல்வி சேவை, மருத்துவ சேவை, இறைவன் சேவை ஆகியவற்றை ஒன்றாக இணைத்து சேவை பணியாற்றி மக்கள் மனதில் இடம்பெற்றுள்ள பாரிவேந்தரை எல்லோரும் ரோல் மாடலாக கருதவேண்டும் என்றார். 

  விழாவில் பத்மஸ்ரீ நல்லி குப்புசாமி செட்டியார், விஜிபி நிறுவன தலைவர் கலைமாமணி வி.ஜி.சந்தோசம், முன்னாள் மாநில தகவல் ஆணையர் கலைமாமணி பேராசிரியை சாரதா நம்பி ஆருரன், பட்டிமன்ற நடுவர்,கலைமாமணி பேராசிரியர் கு. ஞானசம்பந்தன், பெப்சி அமைப்பின் தலைவர் மற்றும் திரைப்பட இயக்குனர் ஆர்.கே. செல்வமணி, பாடலாசிரியர் அறிவுமதி,எஸ்ஆர்எம் தமிழத்துறை தலைவர் முனைவர் பா. ஜெயகனேஷ், வணிகவியல் துறை தலைவர் கு. செல்வசுந்தரம், பல் மருத்துவ கல்லூரி மருத்துவர் அ. சிவச்சந்திரன், கலை மற்றும் அறிவியல் கல்லூரி துணை முதல்வர் பேராசிரியர் கா. மதியழகன், வள்ளியம்மை பொறியியல் கல்லூரி துணைபேராசிரியர் க. சண்முகம் ஆகியோர் டாக்டர் பாரிவேந்தரின் கல்வி, சமூக, மருத்துவ சேவைகளை பாராட்டி வாழ்த்தி பேசினர்.

 நிகழ்ச்சியை எஸ்ஆர்எம் தமிழ்த்துறை தலைவர் முனைவர் பா. ஜெய்கணேஷ்  தொகுத்து வழங்கினார்.

  நிகழ்ச்சியில் டாக்டர் டி. ஆர். பாரிவேந்தர் எம். பி. ஏற்புரை நிகழ்த்தி பேசுகையில் :

என் பிறந்தநாளை 3 நாட்கள் நிகழ்வாக நடப்பது நான் எதிர் பார்க்காத ஒன்று. இந்த நிகழ்வுக்கு நான் தகுதியானவரா என எண்ணி பார்க்கிறேன். என்னோடு பலகாலம் பழகி, பேசி, பகிர்ந்து கொண்டவர்கள் பங்கேற்று இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. நான் ஊழியர்களை மதிக்க கூடியவன், எனக்கு மகிழ்ச்சி அளிக்கும் இன்னொன்று இந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் என்னுடன் இணைந்து இருப்பது. என் வாழ்க்கையில் தொடர்ந்து சேவை செய்யும் வாய்ப்பை எனக்கு  இறைவன் அளித்துள்ளார்.

  இன்று நாட்டிற்கு பெருமைப்படும் நாளாகும் சந்திராயன் சந்திரனில் கால்பதிக்கும் நாள் ஆகும். நான் நாட்டில் பல அரசியல் தலைவர்களை சந்தித்து உள்ளேன், பேசியுள்ளேன், பழகி உள்ளேன் அதில் நான் பெருமைப்படும் ஒரு தலைவர் என்றால் அது  நாட்டின் மீது பற்றுள்ள ஒரே தலைவர் பிரதமர் மோடி மட்டுமே. அவர் பாராளுமன்றத்திற்கு வரும்போது அதன் வாயில் படியில் சிரம் சாத்தி வணங்கி வருகிறார். இதுபோல எந்த தலைவரும் செய்தது இல்லை.

 நாட்டு மக்களுக்கு சேவை செய்ய அரசியல் அவசியம், நான் காலம் தாழ்த்தி அரசியல் கட்சி தொடங்கி உள்ளேன். இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் அதை செய்யும் பணியை தொடங்கியுள்ளேன், இளைஞர்கள் நல்ல அரசை உருவாக்க முடியும் என்றார். 

முடிவில் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் பதிவாளர் முனைவர் சு.பொன்னுசாமி நன்றி கூறினார்.