டிராக்டர் விபத்தில் பலியான சிறுவனை காவல் துறையினர் மீட்டனர்!

ஜி.கே.சேகரன்,
வாணியம்பாடி அருகே டிராக்டர் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிராக்டரில் அமர்ந்து சென்ற 13 வயது பள்ளி மாணவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.டிராக்டர் ஓட்டிச் சென்றவர் படுகாயம்.
உறவினர்கள் சிறுவனின் சடலத்தை அடக்கம் செய்ய வீட்டுக்கு எடுத்து சென்றதால் பரபரப்பு.காவல்துறையினர் விரைந்து சென்று சிறுவனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மல்லங்குப்பம் பழைய தலைவர் வட்டம் பகுதியை சேர்ந்த சக்திவேல் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே அவர் இறந்து விட்ட நிலையில் இவருடைய 13 வயது மகன் பிரசன்னா ராமநாயக்கன் பேட்டை பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் இவருடைய உறவினரான சித்தப்பா பிரகாசம் அதே பகுதியில் டிராக்டர் ஒட்டும் வேலை செய்து வரும் நிலையில் இன்று காய்கறி ஏற்றி வர நிலத்துக்கு டிராக்டர் எடுத்து சென்றார்.அப்போது பள்ளி விடுமுறை என்பதால் 13 வயது சிறுவன் பிரான்னா அவருடைய உறவினருடன் டிராக்டரில் அமர்ந்து சென்றார்.
அப்போது டிராக்டர் பாலன் வட்டம் என்ற பகுதியில் சென்ற போது திடீரென ஸ்டேரிங் கட்டாகி டிராக்டர் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சிறுவன் பிரசன்னா டிராக்டருக்கு அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் டிராக்டர் ஓட்டிச் சென்ற பிரகாசம் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு வாணியம்பாடியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்து நிகழ்ந்த உடன் உறவினர்கள் சிறுவனின் சடலத்தை மீட்டு உடனடியாக வீட்டிற்கு எடுத்துச் சென்றனர். மேலும் சிறுவனின் சடலத்தை அடக்கம் செய்வதற்கான பணிகளை மேற்கொண்டு வந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த அம்பலூர் காவல்துறையினர் சிறுவனின் வீட்டிற்கு சென்று சிறுவனின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று சிறுவனின் உறவினரிடம் கூறினர். அதற்கு சிறுவனின் உறவினர்கள் பிரேத பரிசோதனை வேண்டாம் என்று காவல்துறையினரிடம் நீண்ட நேரமாக கோரிக்கை வைத்தனர்.
இருப்பினும் போலிசார் சிறுவனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து அம்பலூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் டிராக்டர் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 13 வயது பள்ளி மாணவன் டிராக்டருக்கு அடியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.