போலி மருத்துவரால் சாகடிக்கப்பட்ட போலிஸ்!

போலி மருத்துவரால் சாகடிக்கப்பட்ட போலிஸ்!

  கே.ஏ.ஜெகதீஸ்வரி,

 போலிமருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக்கொண்ட போலிஸ் ஒருவர் பரிதாபமாக இறந்தார். 

 இதுகுறித்து போலிஸ் தரப்பில் கூறப்படுவதாவது,

 மதுரை மாவட்டம், வில்லாபுரம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் ராஜபாண்டி (38) என்ற காவலர் வசித்து வந்தார். இவருக்கு கண்மணி என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர்.

  இந்நிலையில் ராஜபாண்டி மதுரை ஆயுதப்படை காவலர் பிரிவில் எலக்ட்ரீசியன் ஆக பணிபுரிந்து வந்தார். அவருக்கு கடந்த சில நாட்களாக காலில் வலி ஏற்பட்டதன் காரணமாக அவர் வில்லாபுரம் வீரபத்திரப்பிள்ளை காம்பவுண்ட் பகுதியில் உள்ள தனியார் வர்ம சிகிச்சை மையத்திற்கு கடந்த மாதம் 27ஆம் தேதி சிகிச்சைக்கான சென்றுள்ளார்.

    அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கால் வலி அதிகரித்துள்ளது. அதனால் ராஜபாண்டியை அவரது குடும்பத்தினர் ஜெய்ஹிந்த்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் இருப்பதாக கூறி அவரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளனர்.

   அதனைத் தொடர்ந்து ராஜபாண்டியன் குடும்பத்தினர் தெற்கு வாசலில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அவரை கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

 அதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ராஜபாண்டியின் மனைவி தனது கணவர் உயிரிழப்புக்கு சித்த வர்ம சிகிச்சை மையம் மருத்துவர் சிவசுப்பிரமணி தான் காரணம் என கூறி அவனியாபுரம் காவல் நிலையத்தில் கடந்த 28ஆம் தேதி புகார் அளித்தார்.

 காவலரின் மனைவி கொடுத்த புகாரின் பெயரில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து ராஜபாண்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

 பிரேத பரிசோதனை அறிக்கை வந்தவுடன் நேற்று அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை இணை இயக்குனர் செல்வராஜ் சித்த மருத்துவம் சிவசுப்பிரமணியிடம் நேரில் சென்று விசாரணை நடத்தினார். அப்போது அந்த மருத்துவர் 12 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளதும் போலியான மருத்துவ சான்றிதழை வைத்துக்கொண்டு 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிகிச்சை அளித்து வந்ததும் தெரிய வந்துள்ளது.

 அதனைத் தொடர்ந்து, அரசு மருத்துவர் செல்வராஜ் கொடுத்த அறிக்கையின்படி அவனியாபுரம் காவல்துறையினர் போலி மருத்துவர் சிவசுப்பிரமணியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.