மணிப்பூரில் நிலவி வரும் அமைதி தொடர்ந்து நீட்டிக்க வேண்டும் - பிரதமர்! சுதந்திர தின விழா!

ம.பா.கெஜராஜ்,
சுதந்திர தின விழாவை முன்னிட்டு டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் இன்று பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செங்கோட்டைக்கு வந்த பிரதமர் மோடி, முப்படைகளின் சிறப்பு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இதையடுத்து கோட்டை கொத்தளத்தில் 21 குண்டுகள் முழங்க பிரதமர் மோடி சுதந்திர தின மேஜர் ஜாஸ்மின் கவுர், மேஜர் நிகிதா நாயர் உதவியுடன் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றினார். கொடியேற்ற நிகழ்வின் போது விமானப்படை ஹெலிகாப்டர்கள் மூலம் மலர்கள் தூவப்பட்டன.
இந்த நிகழ்வில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமை தளபதிகள், மத்திய மந்திரிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பல்வேறு நாடுகளின் தூதர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நாட்டின் பிரதமராக சுதந்திர தினத்தன்று 10-வது முறை பிரதமர் மோடி இன்று தேசியக் கொடியை ஏற்றி வைத்துள்ளார் என்பது நினைவுகூறத்தக்கது.
இதனைத் தொடர்ந்து நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர், "நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக இந்தியா திகழ்கிறது. இந்தியாவில் உள்ள 140 கோடி மக்களும் எனது குடும்பத்தினர். சுதந்திர தினத்திற்காக தியாகம் செய்த அனைவருக்கும் எனது மரியாதையை செலுத்துகிறேன். சில வாரங்களுக்கு முன்பு மணிப்பூரிலும், நாட்டின் பிற பகுதிகளிலும் வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால் இப்போது அனைத்து இடங்களிலும் அமைதி திரும்பி வருவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. சில நாட்களாக மணிப்பூரில் நிலவி வரும் அமைதியை தொடர்ந்து நீட்டிக்க வேண்டும் என மணிப்பூர் மக்களையும், மாநில அரசையும் நான் கேட்டுக் கொள்கிறேன். மணிப்பூர் மாநிலத்தில் விரைவில் அமைதி திரும்பும். இதற்காக மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டு வருகின்றன என்று பேசினார்.
பிரதமர் உரையின் முக்கியம்சங்கள்:-
* இந்தியாவின் டிஜிட்டல் வளர்ச்சி பாராட்டும் வகையில் உள்ளது. * வளர்ந்த நகரங்கள் மட்டுமல்லாமல் சிறிய நகரங்களில் கூட டிஜிட்டல் வளர்ச்சி உள்ளது. * நாட்டின் கனவுகளை நனவாக்குவதற்கான திறன் நம்மிடம் உள்ளது. * சிறிய நகரங்களின் இளைஞர்கள் கூட தாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என காட்டியுள்ளனர். * இன்றைய உலகம் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டதாக உள்ளது. டிஜிட்டல் இந்தியா திட்டத்தை பற்றி உலகம் தெரிந்து கொள்ள விரும்புகிறது. அறிவியல் ஆராய்ச்சி குறித்த சாதனைகளிலும் நமது இளைஞர்கள் சிறந்து விளங்குகின்றனர். * நாட்டின் வளர்ச்சியில் பங்கெடுத்துள்ள விவசாய பெருமக்களுக்கு நன்றி. * நாட்டின் வளர்ச்சிக்கு உடல் உழைப்பு தொழிலாளர்களின் பங்கெடுப்பு மிகவும் முக்கியம். * இந்தியாவின் உயர்வு, வளர்ச்சி நமது நாட்டின் மீதான உலகத்தின் நம்பிக்கையை உயர்த்தியுள்ளது. * விழிப்புணர்வுதான் வன்முறைகளில் இருந்து நமக்கு விடுதலை தருகிறது. * இளையோர் சக்தியால் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பட்டியலில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. மக்களுக்கு நாட்டின் மீதுள்ள நம்பிக்கைதான் உலகிற்கு நம் நாட்டின் மீதான நம்பிக்கை தருகிறது. * இந்தியா நவீனத்துவத்தை நோக்கி முன்னேறி கொண்டிருக்கிறது. * ஜி-20 நாடுகளின் தலைமை பொறுப்பை ஏற்கும் உன்னத வாய்ப்பு இந்தியாவிற்கு கிடைத்துள்ளது. மிகப்பெரிய இலக்கினை நாம் அடையப் போகிறோம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஜி-20 கூட்டம் நடத்தப்படுகிறது. * இன்று நாட்டின் ஏற்றுமதி வேகமாக அதிகரித்து வருகிறது. * உலகளவில் புதிய அரசியல் சூழல் உருவாகி வருகிறது. மாறிவரும் சூழலில் நம் 140 கோடி மக்களின் திறமை உற்று நோக்கப்படுகிறது. * நமது வளர்ச்சி நமது கூட்டு நம்பிக்கையை அடிப்படையாக கொண்டது. * உலகளவில் முன்பிருந்த நிலைமைகள் மாறிவிட்டன. * நாட்டின் ஒவ்வொரு பகுதியும் சமமாக வளர்ச்சியடைவதே சரியான முன்னேற்றம் * அனைவருக்குமான அனைத்து பகுதிகளுக்குமான முன்னேற்றமே நமது இலக்கு * புதிய இந்தியா தடுக்க முடியாதது, வெல்ல முடியாதது.