நிர்வாகியை கழற்றிவிட்ட அதிமுக! தலைமை அலுவலகம் முன் தற்கொலை என மிரட்டல்!

நிர்வாகியை கழற்றிவிட்ட அதிமுக! தலைமை அலுவலகம் முன் தற்கொலை என மிரட்டல்!

 க.பாலகுரு,

  வருகின்ற 20 ம் தேதி அதிமுக மாநாடு மதுரையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதிமுக நிர்வாகிகள் மத்தியில் பண மழை கொட்டிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி ஒருவர் தன்னை தலைமை கைவிட்டதாகவும், அதை கண்டிக்கும் வகையில் வரும் பத்தாம் தேதி சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார்.

  அதிமுக  நிர்வாகி ஒருவர், அதிமுக மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து  நிர்வாகி சென்னை அதிமுக தலைமை கழக அலுவலகம் முன்பு தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே பண்டாரவாடை திருமாளம் பகுதியைச் சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்து தொடர்ந்து ஊராட்சி செயலாளராக கட்சி பணி ஆற்றி வந்துள்ளார். ஏற்காடு இடைத்தேர்தலின் போது கட்சிப் பணி ஆற்றியபோது ஏற்பட்ட விபத்தில் இவருக்கு முதுகு தண்டு உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் 3 நாட்கள் சுயநினைவின்றி இருந்த கல்யாணசுந்தரம் 4-ஆம் நாள் உடல்நிலை தேறிய நிலையில் வீட்டில் விடப்பட்டார்.

 அப்போது முதல் அதிமுகவினரால் கைவிடப்பட்ட கல்யாணசுந்தரத்திற்கு எந்த ஒரு உதவியும் அதிமுக சார்பில் வழங்கப்படவில்லை என கல்யாணசுந்தரம் குற்றம் சாட்டுகிறார்.

  விபத்தின் போது முதுகுத்தண்டில் கடுமையான தாக்கம் ஏற்பட்டதன் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள பெரிய மருத்துவமனைகளில் தனது சொத்துகளை விற்று மருத்துவம் பார்த்து தற்போது உடல்நிலை தேற்றியுள்ளதாக கூறுகிறார். மேற்கொண்டு மருத்துவம் பார்க்க போதிய பொருளாதார வசதி இல்லாத நிலையில் அதிமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சர் காமராஜிடம் பலமுறை உதவி செய்யுமாறு கூறியும் எந்த ஒரு பதிலும் வழங்கவில்லை எனவும், மேலும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு இது குறித்து கடிதம் எழுதியும் பதில் கடிதம் வராத நிலையில், வரும் ஆகஸ்ட் 19ஆம் தேதி சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தனது உயிரை மாய்த்துக் கொள்ளப் போவதாக கல்யாண சுந்தரம் எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.

 ஆகஸ்ட் 20ஆம் தேதி அதிமுக சார்பில் மாநாடு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் கல்யாணசுந்தரம் தற்கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் திருவாரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.