பாஜக வுடன் ஓபிஎஸ் டீம் கூட்டணி  "உங்கள் எண்ணம் பலிக்கட்டும்"!

  பாஜக வுடன் ஓபிஎஸ் டீம் கூட்டணி  "உங்கள் எண்ணம் பலிக்கட்டும்"!

 ம.பா.கெஜராஜ்,

   திருச்சியில் சில மாதங்களுக்கு முன்னர் ஓபிஎஸ் அணி மாநாடு ஒன்றை நடத்தியது. கொங்கு மண்டலத்தில் ஒரு மாநாடு நடத்தப்படும் என்று கூறப்பட்ட நிலையில் கோவையில் ஜனவரி மாதம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

   ஓபிஎஸ் அணியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை எழும்பூரில் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின்னர் ஓ பன்னீர்செல்வம், பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர், புகழேந்தி உள்ளிட்ட அந்த அணியினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய ஓபிஎஸ், தங்கள் அணி சார்பாக ஜனவரி 6ஆம் தேதி கோவையில் பிரம்மாண்ட மாநாடு நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

   ஏற்கெனவே பாஜக உடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறீர்களா என்று அப்போது செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஓபிஎஸ், பாஜக தேசிய தலைமையுடன் தொடர்பில் இருக்கிறோம் என்று கூறினார்.

   அப்போது வைத்திலிங்கம் குறுக்கிட்டு, நட்பு ரீதியிலான தொடர்பில் தான் இருக்கிறோம், தேர்தல் வரும்போதுதான் கூட்டணி என்று கூறினார். நட்பு கூட்டணியாக மாற வாய்ப்பு இருக்கிறதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஓபிஎஸ், "உங்கள் எண்ணம் பலிக்கட்டும்" என்று கூறினார்.