புதிய கல்வி கொள்கையை இங்கு யாரும் முழுமையாக படிக்கவில்லை! ஆளுநர் ஆர். என்.ரவி பேச்சு!

ரா.மதன்,
சென்னை, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழத்தின் 13-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்த கொண்ட தமிழக கவர்னர் ஆர்.என் ரவி மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார். அதை தொடர்ந்து பேசிய அவர் புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கு வலியுறுத்தினார்.
இது குறித்து மேலும் பேசிய கவர்னர் ஆர்.என். ரவி கூறுகையில், " மற்றவர்கள் சொல்வதை கேட்டு புதிய கல்வி கொள்கை தவிர்க்கப்படுகிறது.
புதிய கல்வி கொள்கையை இங்கு யாரும் முழுமையாக படிக்கவில்லை.
அதை முழுவதுமாக படித்து அதில் உள்ள சிறப்புகளை தெரிந்து கொள்ள வேண்டும். புதிய கல்வி கொள்கை தொலைநோக்கு, மாற்றத்திற்கான கல்வியை நோக்கமாக கொண்டது. படிப்பை பாதியில் கைவிட்டாலும், மீண்டும் தொடர புதிய கல்வி கொள்கையில் வாய்ப்பு இருக்கிறது." என அவர் தெரிவித்துள்ளார்.