இறைவா சிக்குண்ட 40 பேரை உயிருடன் மீட்டுத்தாங்க! பிரார்தனை செய்யும் மக்கள்!

இறைவா சிக்குண்ட 40 பேரை உயிருடன் மீட்டுத்தாங்க! பிரார்தனை செய்யும் மக்கள்!

  டி.இ.இர்பான்,

  உத்தரகாண்ட் மாநிலத்தில், சார் தாம் சுரங்க கட்டுமானப் பணியின் போது நடந்த விபத்தில் 40 தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக் கொண்டதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. தீபாவளி அன்று காலை நடந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி பல மணி நேரமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காஷி மாவட்டத்தில் உள்ள யமுனோத்ரியில் சில்க்யாரா மற்றும் போல்கோவன் கிராமங்களை இணைக்கும் வகையில் சார் தாம் சுரங்கப் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இருபுறமும் இருந்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மொத்தம் 4.5 கிலோமீட்டர் தூரத்திற்கு இரட்டை வழித்தடங்களாக பணிகள் நடந்து வருகின்றன. இது முழுமையடைந்து பயன்பாட்டிற்கு வந்தால் உத்தர்காஷி முதல் யமுனோத்ரி வரையிலான 26 கிலோமீட்டர் தூரம் குறைக்கப்படும்.

   இதிலிருந்து செல்லும் சாலைகள் கங்கோத்ரி, யமுனோத்ரி, பத்ரினாத், கேதர்நாத் ஆகிய இமயமலையில் உள்ள புனித தலங்களை இணைக்கிறது. இதன் பணிகள் நடந்து கொண்டிருக்கும் போது, தீபாவளி தினமான நேற்று காலை சில்க்யாரா பகுதியில் பெரும் விபத்து ஏற்பட்டது. சுரங்கத்தின் ஒரு பகுதி அப்படியே உடைந்து மூடிக் கொண்டது. சுரங்கத்தின் 30 மீட்டர் நீளப் பாதை உடைந்து விழுந்தது. இது நுழைவு வாயிலில் இருந்து 270 மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

   இதனால் உள்ளே வேலை செய்து கொண்டிருந்த 40 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். உடனே தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர், இந்தோ - திபெத் எல்லை போலீசார், எல்லையோர சாலைகள் அமைப்பினர் என 150க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இவர்கள் 12 மணி நேரத்திற்கும் மேலாக தொடர் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  இந்நிலையில் சிக்குண்ட தொழிலாளர்கள் அனைவரும் உயிருடன் திரும்ப பலரும் பிரார்தனை செய்துக்கொண்டிருக்கிறார்கள். அங்கு தொடர்ச்சியாக ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருகிறது.