பாலியல் சீண்டல் புகாரில் கலாஷேத்ரா உதவி பேராசிரியர் நண்பர் வீட்டில் கைது!

பாலியல் சீண்டல் புகாரில் கலாஷேத்ரா உதவி பேராசிரியர் நண்பர் வீட்டில் கைது!

ம.பா.கெஜராஜ்,

 பாலியல் சீண்டல் புகாரில் கலாஷேத்ரா உதவி பேராசிரியர் ஹரி பத்மன் அவரது நண்பர் வீட்டில் கைது செய்யப்பட்டார்.

  சென்னை, திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் உள்ள பேராசிரியர் மீது பாலியல் சீண்டல் புகார் கூறப்பட்டு போராட்டங்கள் நடத்தப்பட்டன.

  மேற்படி குற்றச்சாட்டு தொடர்பாக தமிழ்நாடு மகளிர் ஆணையத்தின் தலைவர் குமரி, கலாஷேத்ரா கல்லூரியில் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். இந்த விசாரணையில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் பாலியல் தொல்லை நடைபெற்று வருவதாக மாணவிகள் தெரிவித்துள்ளனர்.

   ஒரு பேராசிரியர் உள்பட 4 பேர் மீது மாணவிகள் புகார் அளித்துள்ளதாகவும், இந்த புகார் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளதாகவும் குமரி தெரிவித்தார். 

 இந்த கல்லூரி விவகாரம் சட்டசபையிலும் எதிரொலித்தது. இந்த சம்பவத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

 அதனை தொடர்ந்து கலாஷேத்ராவில் கடந்த 2015 முதல் 2019-ம் ஆண்டு வரை பயின்ற முன்னாள் மாணவி ஒருவர், இந்த விவகாரம் தொடர்பாக சென்னை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேரில் வந்து எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ள புகார் மனுவில், ஹரிபத்மன் என்ற ஆசிரியர் பாலியல் ரீதியாக தன்னை துன்புறுத்தியதாகவும், இதன் காரணமாகவே கலாஷேத்ராவில் முதுகலையை தொடர முடியாமல் வெளியேறதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

  இந்த புகாரின் அடிப்படையில் உதவி பேராசிரியர் ஹரிபத்மன் மீது அடையாறு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், பெண்ணின் மாண்பிற்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் ஹரிபத்மன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

   இந்நிலையில் விசாரணைக்கு ஆஜராகுமாறு உதவி பேராசிரியர் ஹரி பத்மனுக்கு போலீசார் சம்மன் அனுப்பினர். இவர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக ஹைதராபாத் சென்றிருந்தார். அங்கிருந்து சென்னை திரும்பிய நிலையில் திடீரென தலைமறைவு ஆகிவிட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகின.

   இதையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கினர். சென்னை திரும்பிவிட்டதால் நகர் முழுவதும் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். ஹரி பத்மன் வீடு, உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடு உள்ளிட்டவற்றில் சோதனை நடத்தினர். அவரது தொலைபேசி அழைப்புகள் ஆய்வு செய்யப்பட்டன.

  அதில் வடசென்னையில் உள்ள நண்பரின் வீட்டில் ஹரி பத்மன் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே அங்கு சென்று ஹரி பத்மனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.