வீடு கேட்கும் பயணாளிகளின் பட்டியலை என்னிடம் அனுப்பிவைத்த பிறகே முடிவு செய்யனும்! அமைச்சர் துரைமுருகன் பேச்சு!

ஜி.கே.சேகரன்,
வேலூர் மாவட்டம் அடுத்த கரிகிரி பகுதியில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூபாய் 42.56 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 400 அடுக்குமாடி குடியிருப்புகளை மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ரிப்பன் வெட்டி குத்து விளக்கேற்றி இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்புலட்சுமி, மாநகராட்சி மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார், ஓன்றாவது மண்டலகுழு தலைவர் புஷ்பலதா, காட்பாடி ஒன்றிய பெருங்குழு தலைவர் வேல்முருகன், உட்படத் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அப்போது பயனாளிகளுக்கு குடியிருப்புகளுக்கான சாவிகளை அமைச்சர் வழங்கினார் பின்னர் பல்வேறு துறைகளின் சார்பில் அரசின் நல திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், வேலூர் மாவட்டத்தில் கொண்டுவரப்பட்ட காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம்அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டது, எனவே மீண்டும் காட்பாடி தொகுதியில் அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை அளிக்கும் வகையில் வள்ளிமலை அருகே மகிமண்டலம் என்ற பகுதியில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் தொழில் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் சேர்க்காடு பகுதியில் பொதுமக்களின் நலன் கருதி அனைத்து வசதிகளுடன் கூடிய 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது இது அடுத்த மாதம் துவக்கி வைக்கப்படும்.
இந்த மருத்துவமனைபடிப்படியாக 300 படுகைகள் வரை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். கரிகிரி பகுதியில் கட்டப்பட்டுள்ள 400 குடியிருப்புகள் நெருக்கி கட்டப்பட்டிருக்கிறது. ஆகவே அதை சுத்தமாகவும் சுகாதாரமான முறையில் பராமரிக்கப்பட வேண்டும் இல்லையென்றால் நாறிவிடும்.
இங்கு கட்டியிருக்கும் 400 வீட்டில் 100 வீட்டுக்கு மட்டும் சாவி கொடுக்கப்பட்டிருக்கிறது. மீதி உள்ள 300 வீடுகளை காட்பாடியை சேர்ந்தவர்களுக்கே கொடுக்க வேண்டும். இனி பயணாளிகளின் பட்டியலை எனக்கு காண்ட்பிக்கவேண்டும். நான் டிக் செய்பவர்களுக்கே வீடு கொடுக்க வேண்டும் என்று பேசினார்.
இதே போல் வரதராஜபுரத்தில் புதிய நியாயவிலைகடையை அமைச்சர் துரைமுருகன் திறந்து வைத்து பரமசாத்து -பொன்னை வரையில் பொன்னை ஆற்றின் குறுக்கே தடுப்பணை பூமி பூஜையில் அடிக்கல் நாட்டினார்.