ஆயுதங்களுடன் நீதிமன்றத்துக்குள் நுழைந்த இளைஞர்கள்! கைது செய்த போலிஸ்!

க.பாலகுரு,
திருவாரூர் நீதிமன்ற வளாகத்திற்கு வழக்கு ஒன்றில் ஆஜராக ஆயுதங்களுடன் காரில் வந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கு ஒன்றில் ஆஜராகுவதற்காக வலங்கைமானைச் சேர்ந்த சேனாபதி என்பவர் காரில் வந்துள்ளார். அவருடன் அரித்துவாரமங்கலம் தினேஷ், ஓட்டுநர் விக்டர் தேவராஜ் மற்றும் தேவங்குடி கிராமத்தைச் சேர்ந்த பாரதி செல்வம் ஆகியோரும் வந்துள்ளனர்.
அப்போது நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பணிகள் இருந்த போலீசார் அவர்கள் வந்த காரை சோதனையிட்டபோது, அதில் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து ஆயுதங்களையும், சொகுசு காரையும் மேற்கண்ட நான்கு நபர்களையும் திருவாரூர் தாலுகா போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்களின் பாதுகாப்புக்காக ஆயுதங்களை எடுத்து வந்தனரா? அல்லது யாரையாவது தாக்க எடுத்து வந்தனரா என்கிற கோணத்தில் போலிஸ் விசாரணை நடத்தினர்.