ஐ-ஆம் பிஸி! அக்டோபர் 31இல் ஆஜராக முடியாது! எம்.பி. மஹுவா மொய்த்ரா தடாலடி!

உ .சசிகுமார்,
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் எம்.பியாக உள்ளவர் மஹுவா மொய்த்ரா. நாடாளுமன்றத்தில் இவர் பேசினாலே அனல் பறக்கும். குறிப்பாக பாஜகவை தெறிக்கவிடுவார். இந்நிலையில் அவர் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவதற்கு, ரூ.2 கோடி லஞ்சம் பெற்றுள்ளார் என்று பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக மக்களவை சபாநாயகர் ௐபிர்லாவுக்கு அவர் அனுப்பிய புகார் கடிதத்தில், அதானி குழுமத்தை குறிவைத்து கேள்வி எழுப்புவதற்காக, தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானியிடம் மஹுவா மொய்த்ரா லஞ்சம் பெற்றுள்ளதாக குற்றம் சாட்டியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து குற்றச்சாட்டில் அடிப்படை ஆதாரம் இருப்பதாகக் கூறி, நாடாளுமன்ற ஒழுங்கு நடவடிக்கைக் குழு விசாரணைக்கு மக்களவை சபாநாயகர் ௐ பிர்லா உத்தரவிட்டார். இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக வழக்கறிஞர் ஜெய் அனந்த் டெஹாத்ராய் மற்றும் பாஜக எம்.பி., நிஷிகாந்த் துபே ஆகியோரின் வாக்குமூலத்தை நாடாளுமன்ற ஒழுங்கு நடவடிக்கைக் குழு பதிவு செய்தது.
பின்னர், திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா வருகிற 31ஆம் தேதி நேரில் ஆஜராக நாடாளுமன்ற ஒழுங்கு நடவடிக்கைக் குழு உத்தரவிட்டுள்ளது. மஹுவா மொய்த்ரா மீதான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதில் உள்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகங்களின் உதவியைப் பெறுவோம் என்று நாடாளுமன்ற ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் தலைவரும், பாஜக எம்பியுமான வினோத் குமார் சோங்கர் தெரிவித்திருந்த நிலையில், நாடாளுமன்ற ஒழுங்கு நடவடிக்கைக் குழு சம்மன் அனுப்பிய தேதியில் ஆஜராக முடியாது, ஐ-ஆம் பிஸி என மஹுவா மொய்த்ரா தெரிவித்துவிட்டார்.
"நாடாளுமன்ற ஒழுங்கு நடவடிக்கைக் குழு தலைவர் எனக்கு மாலை 7.20 மணிக்கு அதிகாரப்பூர்வமாக மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். ஆனால், அதற்கு முன்பு தொலைக்காட்சி நேரலையில் 31ஆம் தேதி ஆஜராக எனது சம்மன் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். அனைத்து புகார்களும், தாமாக முன்வந்து பதிவு செய்யப்பட்ட பிரமாணப் பத்திரங்களும் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டன.
எனக்கு ஏற்கனவே திட்டமிடப்பட்ட தொகுதி நிகழ்ச்சிகள் நவம்பர் மாதம் 4ஆம் தேதி வரை உள்ளன. நவம்பர் 5ஆம் (ஞாயிற்றுக்க்கிழமை) தேதி உடனடியாக ஆஜராக ஆவலுடன் இருக்கிறேன் என நாடாளுமன்ற ஒழுங்கு நடவடிக்கைக் குழு தலைவருக்கு அவர் கடிதமும் அனுப்பியுள்ளார். மேலும் தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானியிடம் குறுக்கு விசாரணை செய்ய எனக்கு அனுமதிக்க வேண்டும் எனவும் அதில் தெரிவித்துள்ளார்.