எடப்பாடி பழனிச்சாமியை எப்படி பொதுச் செயலாளர் என்று குறிப்பிடலாம்? நீதிமன்றம் கண்டனம்!

ஜி.சாந்தகுமார்,
எடப்பாடி பழனிச்சாமியை எப்படி பொதுச்செயலாளர் என்று குறிப்பிடலாம்? வழக்கு நிலுவையில் இருக்கும் போது பதிவாளர் எப்படி இதை பதிந்தார்? என்று நீதிமன்றம் அதிருப்தியை வெளியிட்ட நிலையில் சம்மந்தப்பட்ட வழக்கறிஞர் மன்னிப்பு கோரினார்.
2022ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்டனர். எடப்பாடி பழனிசாமி தற்காலிக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தாங்கள் நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஓ.பன்னீர் செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து தொடர்ந்த இந்த வழக்கு இன்று நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது.
மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் இளம் பாரதி ஆஜராகி வாதங்களை முன்வைத்தார். அப்போது அவர், "சென்னை உயர் நீதிமன்றத்தில் இணை ஒருங்கிணைப்பாளர் என எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்துள்ள நிலையில் தற்போது பொதுச் செயலாளர் என பதில் மனு தாக்கல் செய்துள்ளார்" என்று கூறினார்.
இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் அதிருப்தி தெரிவித்த நீதிபதி, பொதுச் செயலாளர் தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும் போது பொதுச் செயலாளர் என எப்படி குறிப்பிட முடியும்?
இந்த மனுவை பதிவுத்துறையில் எப்படி பதிவு செய்தீர்கள், பதிவுத் துறை எப்படி இதை பதிவு செய்தது என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
நிலமையை உணர்ந்த எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நீதிபதி முன் மன்னிப்பு கோரினார்.
அதை ஏற்றுக் கொண்ட நீதிபதி திருத்தம் செய்யப்பட்ட மனுவை தாக்கல் செய்ய எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவிட்டு இந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான வழக்கில் நீதிபதியின் கண்டம் தெரிவித்தது ஓ.பி.எஸ். தரப்பை சற்று குளிர்வித்தது.