டெல்லிக்கு விரைந்த ஆளுநர்! அமித்ஷாவை சந்திக்கிறாரா?

டெல்லிக்கு விரைந்த ஆளுநர்! அமித்ஷாவை சந்திக்கிறாரா?

 ஜி.சாந்தகுமார்,

 தமிழக அரசு அனுப்பும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் நிராகரிக்கிறார் என்பதற்காக தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ளது. இந்நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி புறப்பட்டு சென்றார். அங்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் சட்ட நிபுணர்களை அவர் சந்திக்க உள்ளதாக தெரிகிறது.

 ஆளுநர் ரவி மீது குற்றம்சாட்டி குடியரசுத் தலைவருக்கு முதல்வர் ஸ்டாலின் கடந்த ஜூலையில் கடிதம் எழுதினார். 'சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் முக்கிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் தாமதம் ஏற்படுத்துகிறார். எனவே, பதவியில் இருந்து நீக்கப்பட தகுதியானவர்' என்று அதில் முதல்வர் தெரிவித்திருந்தார்.

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் தாமதம் செய்வதாக தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் வழக்கு தொடரப்பட்டது.

 கடந்த 10-ம் தேதி இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, 'மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கலாம், முடிவை நிறுத்தி வைக்கலாம், திருத்தம் கோரி அரசுக்கு திருப்பி அனுப்பலாம் அல்லது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பலாம். எதுவுமே செய்யாமல் கிடப்பில் போட முடியாது' என தெரிவித்து, விசாரணையை 20.11.2023 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது.

 அப்படியிருக்க, ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று மாலை டெல்லி புறப்பட்டு சென்றார். உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் மற்றும் சட்ட நிபுணர்களை அவர் சந்தித்து ஆலோசிக்க உள்ளதாக தெரிகிறது.