குழந்தைகளை விற்கும் அரசு மருத்துவர்கள்! சிலர் சிக்கினர்! பலர் தப்பினர்!

குழந்தைகளை விற்கும் அரசு மருத்துவர்கள்! சிலர் சிக்கினர்! பலர் தப்பினர்!

 உ.சசிகுமார்

 அரசு மருத்துவமனையில் பணியாற்றும் சில பெண் மருத்துவர்கள் குழந்தைகளை விற்கும் முதலாளிகளாக மாறிவருகிறார்கள். இதில் சிலர் பிடிபடுகின்றனர். பலர் பலரை செட்டில் செய்து தப்பிவிடுகிறார்கள்.

  இந்நிலையில் தற்போது ஒரு பெண் மருத்துவர் சிக்கியிருக்கிறார்.

 நாமக்கல் மாவட்டம்,  திருச்செங்கோட்டில் பெண் குழந்தையை விலைக்கு வாங்க முயன்ற புகாரின் அடிப்படையில், மகப்பேறு மருத்துவர் மற்றும் புரோக்கர் ஆகியோர் சிக்கியிருக்கிறார்கள்.

  திருச்செங்கோடு வாலரைகேட் பகுதியைச் சேர்ந்தவர் விசைத்தறி தொழிலாளி தினேஷ், இவரது மனைவி நாகதேவி. இவர்களுக்கு ஏற்கெனவே 2 பெண்குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், நாகதேவிக்கு கடந்த 7-ம் தேதி சூரியம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண் குழந்தை பிறந்தது.

 அப்படியிருக்க கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருச்செங்கோடு சானார்பாளையத்தைச் சேர்ந்த லோகாம்பாள் என்பவர் தினேஷை சந்தித்து,பெண் குழந்தையை ரூ.2 லட்சத்துக்கு விலைக்கு தரும்படி பேரம் பேசியுள்ளார். இதற்கு ஒப்புக்கொள்ளாத தினேஷ், இதுதொடர்பாக கடந்த 12-ம் தேதி திருசெங்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

 அதில் குழந்தையை லோகாம்பாள் விலைக்கு வாங்க முயன்றதும், குழந்தை குறித்த தகவலை திருச்செங்கோடு அரசு மருத்துவமனை மகப்பேறு மருத்துவர் அனுராதா, லோகாம்பாளுக்கு தெரிவித்ததும் தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் இரவு போலீஸார் கைது செய்து, திருச்செங்கோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

   மேலும், எஸ்.பி ச.ராஜேஷ்கண்ணன் உத்தரவின் பேரில், டிஎஸ்பி இமயவரம்மன் தலைமையில் தனிப்படை அமைத்து, குழந்தை விற்பனை தொடர்பாக மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 அதுமட்டுமின்றி  குழந்தை விற்பனை புகார் தொடர்பாக திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குநர் ராஜ்மோகன் விசாரணை நடத்திய நிலையில், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று கூறியதாவது:

திருச்செங்கோடு மருத்துவமனையில் குழந்தை விற்கப்படுவதாகவும், தரகர்கள் மூலம் விற்பனை நடக்கிறது என்றும் செய்தி பரவியது. நீண்டகாலமாக லோகாம்பாள் என்ற பெண் இடைத்தரகராக இருந்துள்ளார் என விசாரணையில் தெரியவந்தது. மகப்பேறு மருத்துவர் அனுராதாவும் இதற்கு உடந்தையாக இருந்துள்ளார்.

தீவிர விசாரணையில், இருவரும் சிறுநீரக விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. காவல், மருத்துவத் துறை அதிகாரிகள் இணைந்து குழு அமைத்து விசாரணை நடத்த அறிவுறுத்தி உள்ளோம். இதில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்று முழுமையாக கண்டறிந்து, அவர்கள் மீது துறைரீதியாகவும், சட்டரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவர் அனுராதா, லோகாம்பாள் கைது செய்யப்பட்டுள்ளனர். அனுராதா இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

 இதே போல் இராணிப்பேட்டை மாவட்டத்தில் மேல்விஷாரம் மருத்துவமனையில் ஒரு பெண் டாக்டர் குழந்தைகளை விற்றது குறித்து பரபரப்பாக புகார் எழுப்பப்பட்டது. பின்புலம் கொண்ட அந்த மருத்துவர் தனது செல்வாக்கை வைத்து தற்காலிகமாக தப்பியிருக்கிறார்.

  அவர் மீது உரிய விசாரணை நடத்த அமைச்சர் உத்தரவிட வேண்டும் என்பது அந்த மருத்துவமனை வட்டாரத்தினரின் அவா.