அரசியலுக்கு குட் பை! வி.கே.பாண்டியன் திடீர் முடிவு! ஒடிசாவில் அடுத்தடுத்து திருப்பம்!

Naresh.N
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் இந்தியா முழுக்க பரபரப்பாக பேசப்பட்ட பெயர் வி.கே.பாண்டியன். தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். பஞ்சாப் மாநில ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வான இவர் பின்னாளில் ஒடிசா மாநில ஐஏஎஸ் அதிகாரியை திருமணம் செய்து கொண்டதால் அம்மாநிலத்திற்கு இடம்பெயர்ந்தார்.
அந்த வகையில் ஒடிசாவில் சார் ஆட்சியாளராகவும், ஆட்சியராகவும் பணிபுரிந்து மக்கள் பணிகளில் தலை சிறந்து விளங்கினார். இதனால் அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அவர்களின் குட் புக்கில் இடம் பெற்றார்.
பின்னர் அவரது அரசியல் ஆலோசராகவே மாறிப்போனார். முழு நேர அரசியல் பணியில் ஈடுபடுவதற்காகவே பிஜூ ஜனதா தளத்தில் உறுப்பினராக இணைந்து தேர்தல் பணியாற்றினார்.
இந்நிலையில் கடந்த மக்களவைத் தேர்தலின் போது ஒடிசா மாநில சட்டசபை தேர்தலும் சேர்ந்துநடைபெற்றது.
அப்போது பாண்டியனின் தேர்தல் பணி மிகவும் சிறப்பாக வியூகம் அமைத்து நடைபெற்றது.
இந்நிலையில், அந்த மாநிலத்தில் பாஜக சார்பாக பிரச்சாரம் செய்யச் சென்ற மோடி பாண்டியனை வெளுத்து வாங்கினார். ஒடிசா பூரி ஜெகநாதர் ஆலயத்தின் முக்கிய சாவி திருடு போய்விட்டது.அதை பாண்டியன் தான் திருடி கொண்டு போய் தமிழகத்தில் மறைத்து வைத்து விட்டார் என்று மக்கள் மத்தியில் நேரடியாக குற்றம் சாட்டினார் மோடி.
ஒரு தமிழர் ஒடிசாவை ஆளலாமா நவீன் பட்நாயக் அவர்களின் அடுத்த வாரிசு பாண்டியன் தான் என்று சாடினார்.
பிரதமராக இருந்து கொண்டு மாநில மக்களின் மனதை புண்படுத்தும் விதமாக இப்படி பேசுவது நியாயமா என்று பிரதமருக்கு எதிராகநாடெங்கிலும் எதிர்ப்பு குரல் கிளம்பியது.
இது நவீன் பட்நாயக் அவர்களின்வெற்றிக்கு பெரிதும் உதவும் என்று நினைத்த நிலையில், எதிர்பாராத விதமாக பாஜக அங்கு வென்று விட்டது. 24 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சி செய்து வந்த நவீன் பட்நாயக் ஆட்சி பறிபோனது.
அதனைத் தொடர்ந்து அங்கு பாஜக ஆட்சி மலர உள்ள நிலையில், பாண்டியன் என்னுடைய அரசியல் வாரிசு அல்ல என்னுடைய அரசியல் வாரிசு யார் என்பதை பிறகு வெளியிடுவேன் என நவீன் பட்நாயக் அறிவித்துவிட்டார்.
இந்நிலையில் பாண்டியன் திடீரென்று தலைமறைவானார். அப்படி இருக்க தற்போது அரசியலுக்கு குட் பை சொல்லிவிட்டு விலகி இருக்கிறார் இதற்கான அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.
யார் இந்த வி.கே.பாண்டியன்.
பாண்டியன் மதுரை மாவட்டம், மேலூரில் உள்ள கூத்தப்பட்டி என்கின்ற சிற்றூரில் பிறந்தவர்.
2000 ம்ஆண்டு இந்தியக் குடிமைப் பணி தேர்வில் வென்று பஞ்சாபில் ஐஏஎஸ் அதிகாரியானார். ஒடியாவைச் சேர்ந்த இ.ஆ.ப அதிகாரியான சுஜாதா ரௌட்டைத் திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு ஒடிசா மாநிலப் பணிக்கு மாறினார். அது இவரது வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.
முதலில் கலஹண்டி மாவட்டத்தில் தர்மகரின் சாராட்சியராகப் தனது பணியைத் தொடங்கினார். 2011 ஆம் ஆண்டு ஒடிசா முதலமைச்சரின் அலுவலகப் பணியில் இணைந்தார். பின்னர் நவீன் பட்நாயக்கின் மிகவும் நம்பகமான தளபதி ஆனார். வி. கே. பாண்டியன்.
வேளாண் மக்களுக்கான குறைந்தபட்ச ஆதரவுவிலை திட்டத்தை வெற்றிகரமாக அமல்படுத்தினார். 2004 இல் ரூர்கேலாவின் கூடுதல் ஆட்சியராக பதவியேற்றார். அப்போது 20 ஆண்டுகளாக நட்டத்தில் இயங்கிக்கொண்டிருந்த ரூர்கேலா மேம்பாட்டு ஆணையத்தை ஐந்து மாதங்களில் மீட்டெடுத்தார். 2005 ஆம் ஆண்டு மயூர் பஞ்சு மாவட்ட ஆட்சியராக நியமிக்கபட்டார்.
அப்போது மாற்றுத் திறனாளிகளுக்கு சான்றிதழ் வழங்க ஒற்றை சாளரமுறையை அமல்படுத்தினார். கஞ்சம் மாவட்ட ஆட்சியராகபணிபுரிந்தபோது அங்கு தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை சிறப்பாக நடைமுறைப்படுத்தினார். அச்சமயத்தில் 12 இலட்சம் பேருக்கு வங்கிக் கணக்குகளைத் தொடங்கிக் கொடுத்தார். நேரடி மானியத் திட்டத்துக்கு நேரடி முன்னுதரானமாக தொழிலாளர்களுக்கு அவர்களின் ஊதியத்தை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தினார்.
2011இல் முதல்வர் நவீன் பட் நாயக்கின் தனிச் செயலாளராக நியமிக்கப்பட்டு 2023 வரை அப் பதவியில் இருந்தார். 2012 ஆம் ஆண்டு மே மாதம் முதலமைச்சர் நவீன் பட்நாய்க் இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அந்த நேரத்தில் ஆளும் கட்சியின் மூத்த தலைவரான பியாரிமோகன் மகாபோத்ரா பிஜு ஜனதா தள ஆட்சியைக் கவிழ்க்கும் சதியில் ஈடுபட்டார்.
இச்சதியை பாண்டியன் வெற்றிகரமாமாக முறியடித்தார். அப்போதிலிருந்து நவீன் பட்நாய்க்கின் வலதுகரமாக பாண்டியன் ஆனார். அதன் பிறகு பாண்டியனின் ஆலோசனையின் பேரில் ஒடிசாவில் பல்வேறு நலத்திட்டங்கள் அமல்படுத்தபட்டன.
2023 ஆம் ஆண்டு, அரசு பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்ற, பாண்டியன் முழுநேர அரசியலில் இறங்கினார். பின்னர் பாண்டியன் 5டி (வெளிப்படைத்தன்மை, தொழில்நுட்பம், குழுப்பணி, நேரம், உரு மாற்றீடு) முன்முயற்சிக்கு தலைவராக நியமிக்கப்பட்டார். இது கேபினட் அமைச்சர் அந்தஸ்து கொண்டதாகும்.
அண்மையில், பாண்டியன், நவீன் பட் நாயக்கின் அறிவுறுத்தலின் பேரில், யாத்ரீகர்களின் வசதிகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஸ்ரீமந்திர் பரிக்ரமா திட்டத்தின் முன்னேற்றத்தை ஆய்வு செய்தார். இவர் மாநிலம் முழுவதும் உள்ள பழமையான, புகழ்பெற்ற கோயில்களின் மறுசீரமைப்பு மற்றும் உயர்நிலை பள்ளி மேம்பாடு திட்டத்தில் முதலமைச்சருக்கு உதவியாக பணிபுரிந்தார். பாண்டியன் ஒடிசா முழுவதும் உள்ள மருத்துவமனைகளை மாற்றியமைத்த பெருமைக்குரியவர்.
இவ்வளவு இருந்தும் என்ன பயன் அரசியல் அவரை காலை விட்டுள்ளது.