காதலனை கடத்தி நிர்வாணமாக்கி சித்ரவதை செய்த காதலி!

ஆர்.செல்வராஜ்,
காதலனை காரில் கடத்தி நிர்வாணமாக்கி, சிகெரெட்டால் சூடு வைத்து சித்ரவதை செய்த காதலியை பற்றின செய்திதான் தற்போது பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இது பற்றி கூறப்படுவதாவது,
கேரள மாநிலம், வர்க்கலா செர்னியூரை சேர்ந்தவர் லட்சுமி பிரியா (19). கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். லட்சுமி பிரியாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த 19 வயது வாலிபருக்கும் காதல் ஏற்பட்டதால், அவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்துக் கொண்டனர்.
இந்நிலையில் லட்சுமி பிரியாவுக்கு கல்லூரியில் படிக்கும் இன்னொரு மாணவருடன் தொடர்பு ஏற்பட்டது. இதில் அந்த மாணவரை லட்சுமிபிரியா காதலிக்க தொடங்கினார். இதனால் முதல் காதலனை சந்திப்பதை தவிர்த்தார். இதனால் மனம் உடைந்த முதல் காதலன், லட்சுமி பிரியாவை சந்தித்து தன்னுடனான காதலை கைவிடக்கூடாது என்று கெஞ்சினார்.
இரண்டாவது காதலன் மீதான மோகத்தில் முதல் காதலனை மறந்த லட்சுமி பிரியா, அவரை தன்னுடன் பேச வேண்டாம் எனவும் மீறி பேசினால் தொலைத்து விடுவதாகவும் மிரட்டினார்.
இருந்த போதும், முதல் காதலன் லட்சுமி பிரியாவை தொடர்ந்து சந்திக்க முயன்றார். இதில் ஆத்திரம் அடைந்த லட்சுமி பிரியா நேற்று முன்தினம் முதல் காதலனை சந்திக்க வருமாறு அழைத்தார். அவரது பேச்சை நம்பி லட்சுமி பிரியா அழைத்த இடத்திற்கு முதல் காதலன் சென்றார்.
அப்போது அங்கு லட்சுமி பிரியாவுடன் 2-வது காதலனும் இருந்தார். இருவரும் அவர்களின் கூட்டாளிகள் துணையுடன் முதல் காதலனை தாக்கி ஒரு காரில் ஏற்றி கடத்தி சென்றனர். நேற்று முன்தினம் முழுவதும் அவரை சித்ரவதை செய்தனர். அவரை நிர்வாணமாக்கி சிகரெட்டால் உடல் முழுவதும் சூடு போட்டனர்.
பின்னர் அவரது செல்போனை பறித்து கொண்டு கையில் இருந்த ரொக்கப்பணத்தையும் எடுத்து கொண்டு தப்பி சென்று விட்டனர்.
இதற்கிடையே மகனை காணவில்லை என அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடிய போது, அவர் உடல் முழுவதும் காயங்களுடன் சாலையில் விழுந்து கிடந்தது தெரியவந்தது. உடனே அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்த போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.
இதில் அவரை முன்னாள் காதலி, அவரது 2-வது காதலனுடன் சேர்ந்து கடத்தி சென்று சித்ரவதை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து லட்சுமி பிரியாவை பிடிக்க போலீசார் முயற்சி மேற்கொண்டனர். அவரது செல்போன் சிக்னல் மூலம் அவர் எர்ணாகுளம் பகுதியில் பதுங்கி இருப்பதை அறிந்த போலீசார் இன்று அவரை அதிரடியாக கைது செய்தனர். ஆனால், அவரது 2-வது காதலன் மற்றும் 4 கூட்டாளிகள் தலைமறைவாகிவிட்ட நிலையில் அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.