ஓடி ஒளிந்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்! தேடிப் பிடித்த சிபிசிஐடி போலிஸ்!

ம.பா.கெஜராஜ்,
22 ஏக்கர் நிலமோசடி புகார் தொடர்பாக தமிழக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று சிபிசிஐடி போலிசாரால் கைது செய்யப்பட்டார். கேரள மாநிலம் திருச்சூரில் பிடிபட்ட அவர் கரூர் சிபிசிஐடி அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டார்.
வழக்கின் விவரம் வருமாறு,
கரூர் மாவட்டம் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவருக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போலியாக பத்திரப்பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக கரூரில் உள்ள மேலக்கரூர் சார்பதிவாளர் (பொ) முகமது அப்துல் காதர் கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். எஸ்.பி அலுவல்;லகத்திலும் தனியாக புகார் அளிக்கப்பட்டது.
அந்தப் புகாரில், "அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள், என்னுடைய மனைவி, மகள் பெயர்களில் உள்ள சொத்துகளை அபகரித்துக் கொண்டனர். அந்த சொத்துகளை எனது மனைவி, மகளை மிரட்டி பத்திரப்பதிவும் செய்துக் கொண்டனர். இந்த சொத்தின் மதிப்பு ரூ.100 கோடி ஆகும்" என்று பிரகாஷ் கூறியிருந்தார்.
இதுதொடர்பாக கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதில், எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர் உள்பட யுவராஜ், பிரவீன், ரகு, சித்தார்த்தன், மாரப்பன், செல்வராஜ், ஷோபனா ஆகிய 7 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் கடந்த மாதம் 9-ம் தேதி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
அப்படியிருக்க இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு தள்ளுபடியானது. இதனிடையே, இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டது.
மேலும், நிலமோசடி வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் மனுவை கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது சகோதரர் சேகர் ஆகியோர் நேற்று திங்கள்கிழமை மனுத்தாக்கல் செய்தனர்.
அதில், ''புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கும், தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அரசியல் பழிவாங்கும் நோக்கில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது'' என்று கூறியுள்ளனர். இந்த மனுக்கள், நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
ஒரு மாதத்திற்கும் மேலாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமறைவாக இருந்ததால், சி.பி.சி.ஐ.டி போலீசார் அவரை தேடி வந்தனர். கடந்த 5 வாரங்களாக தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை சிபிசிஐடி போலீஸார் கேரள மாநிலம் திருச்சூரில் இன்று கைது செய்தனர். அவரை கரூர் திண்ணப்பா நகரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்துக்கு அழைத்து வந்து அவரிடம் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.