மகளிர் உரிமை தொகை பெயரில் போலி செய்தி! செயலி மூலம் வெளியானதை நம்ப வேண்டாம்! திருவாரூர் ஆட்சியர் எச்சரிக்கை!

க.பாலகுரு,
அரசு திட்டங்கள் குறித்து தவறான தகவல்களை பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அரசின் நலத்திட்டங்கள் மற்றும் அறிவிப்புகள் போன்றவை செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகள் மற்றும் இணைய இதழ்களில் வெளியாகி மக்கள் அறிந்து கொள்ளும் சூழல் இருந்த நிலையில், தற்போது சமூக வலைத்தளங்கள் பலவற்றில் இது போன்ற செய்திகள் வெளியாகி வருகிறது.
குறிப்பாக வாட்ஸாப் பல்வேறு செயலிகள் மூலம் தகவல்கள் மற்றும் செய்திகள் அனுப்பப்பட்டு வருகின்றன.
இவற்றிலும் பல செய்திகளில் உண்மை தன்மை இல்லை என்கிற போதிலும் மக்களின் அவசர போக்கு காரணமாக அவற்றையெல்லாம் வாசிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது.
தில் ஒரு குறிப்பிட்ட செயலியில் செய்தியாளர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் செய்திகளை வெளியிட வாய்ப்பு கொடுத்திருக்கிறது அந்த நிறுவனம்.
இதனால் பல்வேறு தவறான தகவல்கள் இந்த செயலின் மூலம் பரப்பப்பட்டு வருகின்றன. அதில் ஒன்றாக தமிழக அரசின் திட்டங்களில் முக்கிய திட்டமாக உள்ள மகளிர் உரிமை திட்டம் குறித்து தற்போது தவறான தகவல்கள் அந்த செயலியில் பரப்பப்பட்டு வருகின்றன.
அதாவது, "இதுவரை மகளிர் உரிமை தொகை திட்டத்தில் விண்ணப்பிக்காதவர்கள் நாளை முதல் அதாவது ஆகஸ்ட் 17,19,20 ஆகிய மூன்று நாட்கள் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல் முற்றிலும் தவறானது என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ அறிவித்துள்ளார். மேலும் இதுபோல் அரசின் திட்டங்களை குறித்து தவறான தகவல்களை பரப்பி பொதுமக்கள் மத்தியில் வதந்தி பரப்புவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரூஸ்ரீ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த செயலி நிறுவனமானது தமிழகம் முழுவதிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இப்படிப்பட்ட முகாம் நடைபெறும் என்று அறிவித்திருக்கிறது.
இதற்கு திருவாரூர் மாவட்ட ஆட்சியரைப் போலவே, கன்னியாகுமரி உள்ளிட்ட பல மாவட்ட ஆட்சியர்கள் மறுப்பு தெரிவித்து எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.