அதிமுக ஓட்டுகளுடன் வெற்றிப் பெற்ற திமுக! டெபாசிட் பெற்ற பாமக! இழந்த நாம் தமிழர்!!

ம.பா.கெஜராஜ்,
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக அமோக வெற்றியை பெற்றுள்ளது. திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 1,24,053 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். இந்த மாபெறும் வெற்றிக்கு அ.தி.மு.க. வாக்களர்களின் வாக்குகளும் உதவியிருப்பதாக பார்க்கப்படுகிறது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினரான திமுகவைச் சேர்ந்த புகழேதி இறந்துவிட்ட நிலையில் அந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த 10-ம் தேதி நடைபெற்றது. இதில் திமுக சார்பாக அன்னியூர் சிவா, பாமக சார்பாக சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் அபிநயா உள்ளிட்ட 29 பேர் போட்டியிட்டனர். ஆனால் அதிமுக இந்த தேர்தலில் பங்கேற்கவில்லை.
இதையடுத்து, இதன் வாக்கு எண்ணிக்கை இன்று 13 ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வந்தது. வாக்கு எண்ணிக்கை தொடங்கிய போது பாமக வேட்பாளர் சி. அன்புமணி முன்னிலை வகித்து வந்தார். இதனால் பாமகவினர் முறுக்கேற்றிக் கொண்டனர்.
ஆனால் போகப்போக திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வேகமாக முன்னேறினார். அந்த வகையில் அவர் வெற்றி வாகை சூடினார். பாமக வேட்பாளரை காட்டிலும் கூடுதலாக 67,757 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றி பெற்றுள்ளார்.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியவுடன் முதலில் தபால் வாக்கை எண்ணும் பணி நடந்தது. அதில், முதல் வாக்கே கையெழுத்து இல்லாததால் செல்லாத வாக்காக அறிவிக்கப்பட்டது. தபால் வாக்குகள் எண்ணிக்கையின் முடிவில், திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 130 வாக்குகளுடன் முன்னிலை பெற்றார். பாமக வேட்பாளர் சி.அன்புமணிக்கு 10 வாக்குகள் கிடைத்தன. நாம் தமிழர் வேட்பாளர் டாக்டர் அபிநயா 2 வாக்குகள் பெற்றார். அப்போது ஒரே ஒரு ஓட்டு தொடர்பாக பாமகவினர் பிரச்சனை செய்ததால் வாக்கு எண்ணிக்கை பணிக்கு இடையுறு ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த திமுக வேட்பாளார் அந்த ஓட்டை திமுக வாக்காக கருத வேண்டாம் என்று சொல்லி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளிவைத்தார்.
மொத்தம் 20 சுற்றுகளாக வாக்கு எண்ணப்பட்டது.
ஆளும் கட்சியின் மக்கள் நலதிட்டங்கள் தான் திமுக வேட்பாளரின் வெற்றிக்கு காரணம் என்று கருதப்பட்டாலும்,
அதிமுகவுக்கு செல்ல வேண்டிய வாக்குகள் பெரும்பாண்மையாக திமுகவுக்கே அளிக்கப்பட்டிருப்பதாக பார்க்கப்படுகிறது.ரதே போல் நாம் தமிழர் கட்சிக்கும் கனிசமாக வாக்களித்திருக்கிறார்கள். ஆனால் அந்த தொகுதி அதிமுகவினர் பாமக வேட்பாளரை ஆதரிக்கவில்லை என்பது வாக்கு வித்தியாசத்தில் அறிய முடிகிறது.
மக்களோடு இருக்கிறோம்...முதலமைச்சர் மகிழ்ச்சி
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றி குறித்து திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். அதில், "விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுகவுக்கு மகத்தான, மாபெரும் வெற்றியை வழங்கிய விக்கிரவாண்டி வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதேநேரத்தில் இந்தியா முழுமைக்கும் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற 13 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் இண்டியா கூட்டணி கட்சிகள் 11 இடங்களில் முன்னணியில் இருக்கிறது. பாஜக தோல்வியைத் தழுவி இருக்கிறது. மக்களவைத் தேர்தலில் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மையைப் பெறாத கட்சி தான் பாஜக. இறங்கி வந்து சில கட்சிகளின் தயவால் மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது பாஜக.
அத்தகைய தோல்வி முகமே பாஜகவுக்கு இந்த இடைத்தேர்தலிலும் தொடர்கிறது.தோல்விகளில் இருந்து பாஜக பாடம் கற்றுக் கொள்ளவேண்டும். மாநில உணர்வுகளை மதிக்காமல் ஆட்சியையும் கட்சியையும் நடத்த முடியாது என்பதை பாஜக இனியாவது உணர வேண்டும். தமிழகத்தைப் பொறுத்தவரை 2019-ம் ஆண்டு முதல் திமுக தலைமையிலான இண்டியா கூட்டணியின் வெற்றி தொடர்கிறது. திமுக வரலாற்றின் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்க வெற்றியாக விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றியும் அமைந்துள்ளது.
இந்த வெற்றியானது எங்களுக்கு மாபெரும் உற்சாகத்தையும், எழுச்சியையும், அதேசமயத்தில் கூடுதல் பொறுப்பையும் கொடுத்திருக்கிறது. நாள்தோறும் நல்ல பல திட்டங்கள் என சாதனைகள் செய்து வரும் திமுக அரசின் சாதனைகளுக்கு மகுடம் சூட்டுவதாக, சாதனை வெற்றியாக இது அமைந்துள்ளது. நாங்கள் எங்களது சாதனைப் பயணத்தையும், வெற்றிப் பயணத்தையும் தொடர்கிறோம்.மக்களோடு இருக்கிறோம். மக்கள் எங்களோடு இருக்கிறார்கள்." என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
பாமக வுக்காத்தான் வெற்றி? மருத்துவர் ராமதாஸ்.
விக்கிரவாண்டி தொகுதியில் உண்மையான வெற்றி பாமகவுக்கு தான் கிடைத்துள்ளது பணத்தை வாரி இறைத்து திமுக பெற்ற வெற்றி தற்காலிகமானது. 2026 தேர்தலில் பாமக மாபெரும் வெற்றியை பெறப்போவது உறுதி" என்றும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
திமுக சார்பில் செலவழிக்கப்பட்ட ரூ.250 கோடிக்கு கிடைத்த வெற்றி இது என்ற ராமதாஸ், தேர்தல் அதிகாரிகளும், காவல் அதிகாரிகளும் திமுகவின் தொண்டர் அணியாகவே மாறி, தேர்தல் விதிமீறல்களை வேடிக்கைப் பார்த்தது. அனைத்து அத்துமீறல்களுக்கும் துணை நின்றார்கள். அந்த வகையில் இது திமுகவும், தேர்தல் அதிகாரிகளும், காவல்துறையினரும் அமைத்திருந்த கள்ளக் கூட்டணிக்கு கிடைத்த வெற்றி" என்று அவர் விமர்சித்தார்.
இதனிடையே பாமக டெபாசிட் பெற்றதற்காக அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர்.
இது தேர்தலே இல்லை ஏலம்! அபிநயா,
விக்கிரவாண்டியில் திமுக 50 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் முன்னிலை பெற்றிருந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா, "நாங்கள் டெபாசிட் இழந்ததாகவே இருக்கட்டும். இந்த வெற்றி உங்களுக்கு திருப்தி அளிக்கிறதா என்று திமுக வேட்பாளரைக் கேளுங்கள். கடந்த தேர்தலைவிட கூடுதலாக நாங்கள் 2 ஆயிரம் வாக்குகளைப் பெற்றுள்ளோம். காணை பகுதியில் திமுகவினர் இளம் வாக்காளர்களுக்கு கஞ்சா சப்ளை செய்தனர். இது தேர்தலே இல்லை. திமுகவினர் ஏலம் எடுத்துள்ளனர்.
வருங்காலங்களில் இடைத் தேர்தலை ஏலம் விட்டுவிடுங்கள். இதெல்லாம் தெரிந்துதான் அதிமுக பின்வாங்கியது. இது பண நாயகத்தின் வெற்றி; ஜனநாயகத்தின் மரணம்" என்றார்.