தொடர் புகார்கள் எழும் கவுன்சிலர்கள் பதவி பறிப்பு ! வசூல் கவுன்சிலர்களுக்கு மாநகராட்சி கிடுக்கிப்பிடி!

தொடர் புகார்கள் எழும் கவுன்சிலர்கள் பதவி பறிப்பு ! வசூல் கவுன்சிலர்களுக்கு மாநகராட்சி கிடுக்கிப்பிடி!

ம.பா.கெஜராஜ், 

 கவுன்சிலர் என்றாலே கட்டிங்தான், அதிலும், புதிய கட்டிடங்கள் கட்ட அனுமதி பெற முயல்பவர்களை அடையாளம் கண்டு வசூல் செய்வது தான் அவர்களது பிரதான பணியாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

 அதை மையப்படுத்தி மேற்படி கட்டிடங்களின் முதலாளிகளை மிரட்டி பணம் பறிப்பது மட்டுமே வேலை என்று செயல்படுகிறார்கள். அதுவும் தலைநகர் சென்னையில் சொல்லவே வேண்டாம்.

 அங்கு புதிதாக கட்டப்படும் கட்டடங்களுக்கான திட்ட அனுமதி வழங்குவதில், கவுன்சிலர்களின் தலையீடு அதிகரித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து, 'வசூல் வேட்டை'யில் ஈடுபடும் கவுன்சிலர்கள் மீது, பதவி பறிப்பு நடவடிக்கை எடுக்கவும் மாநகராட்சி நிர்வாகம் தயக்கம் காட்டாது என, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  கூடவே விதிமீறல் கட்டடங்கள் குறித்த ஆய்விலும் மாநகராட்சி நிர்வாகம் கடுமை காட்டத் துவங்கியிருக்கிறது.

சற்று விரிவாக பார்ப்போம்,

   சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், பத்தாயிரம் சதுர அடி பரப்பளவுக்கு கீழ் கட்டப்படும் கட்டடங்களுக்கு, மாநகராட்சி அனுமதி அளிக்கிறது. அதற்கு மேலான பரப்பளவில் கட்டப்படும் கட்டடங்களுக்கு, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ., விடம் அனுமதி பெற வேண்டும்.

 அப்படி கட்டப்படும் கட்டிடத்திற்கான வடிவமமைப்பு, வரைப்படம், திட்டம் உள்ளிட்டவை அடிப்படையில், கட்டட அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால்,அனுமதிக்கப்பட்ட அளவை தாண்டியும், விதிகளை மீறி பெரும்பாலான கட்டடங்கள் கட்டப்படுகின்றன.

 அது தான் நம்ம ஆளுங்களுக்கு பெரிய லாட்டரி சீட்டாக உள்ளது.

 ஒரு சில மாநகராட்சி அதிகாரிகளுக்கு, கட்டட உரிமையாளர்களின் பொறியாளர்கள் தரப்பில் கட்டிங் கொடுக்கப்படுவதால் எல்லாமுமே சகஜமாக நடக்கிறதாம்.

 அப்படியிருக்க புதிதாக தேர்வாகியுள்ள கவுன்சிலர்கள் சிலர் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக செலவிட்ட பணத்தை திரும்ப எடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அதற்காக செம வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனராம்.

 அதிலும், சதுர அடி கணக்கில் கட்டணம் நிர்ணயித்து, கவுன்சிலர்கள் பணம் பறிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இது தவிர, கட்டப்பஞ்சாயத்து, அடி தடி, அதிகாரிகளை மிரட்டுதல் உள்ளிட்ட சம்பவங்களும் நிகழ்கிறதாம்.

 இதற்கு அத்தாட்சியாக, வட சென்னை பகுதியில், பெண் கவுன்சிலரின் கணவர் மற்றும் அவரது ஆதரவாளர்கள்,  கட்டுமான பணிக்கு லஞ்சம் கேட்பதாக எழுந்த புகாரை குறிப்பிடலாம்.

 இந்த சூழலில் தான்,அடாவடி கவுன்சிலர்கள் மீது நடவடிக்கை எடுக்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

 ஆகவே, அடாவடியில் ஈடுபடுதல், பொதுமக்களை மிரட்டி பணம் வசூல் செய்தல், விதிமீறல்களுக்கு ஒத்துழைத்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடும் கவுன்சிலர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.

 மேலும், தொடர் புகார்கள் எழும் கவுன்சிலர்கள் மீது பதவி பறிப்பு நடவடிக்கை பாயும் எனவும், எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாம்.

அது சரி...எத்தனை நாளுக்கென்று பார்க்கலாம்,