மோடியை முன் மொழிந்த பிராமணர் - ஓபிசி - எ.ஸ்.சி பிரிவினர்! நான்கு மோதிரங்கள் உள்ளனவாம்!!!

ம.பா.கெஜராஜ்,
வாரணாசி மக்களவை தொகுதியில் 01.06.2024 அன்று இறுதிகட்ட தேர்தல் நடைபெறுகிறது. அந்த தொகுதியில் பிரதமர் மோடி மூன்றாவது முறை போட்டியிடுவதற்காக நேற்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். முன்னதாக கங்கை கரையில் வேத மந்திரங்கள் ஒலிக்க பூஜை செய்த பிரதமர் மோடி, பின்னர் கால பைரவரை வழிபட்டார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற பேரணியில் பிரதமர் மோடியுடன், 12 மாநில முதல்வர்கள், தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் பங்கேற்றனர்.
பிரதமர் மோடியை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் அஜய் ராய் என்பவர் போட்டியிடுகிறார்.
வாராணசி ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த பிரதமர் மோடி, அங்கு தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான ராஜலிங்கத்திடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்த போது உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இருந்ததை பார்க்க முடிந்தது. ஆனால் மோடியுடன் சாமியார் உடையில் வந்தவர்கள் யார் என்பது தான் ஒரு பேசும் பொருளாக இருந்தது.' அவர்கள் தான் மோடியின் வேட்புமனுவில் முன்மொழிந்து கையெழுத்திட்டிருக்கிறார்கள்.
வாரணாசியில் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த போது, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா,பாஜக மாநிலத் தலைவர் சவுத்ரி பூபேந்திர சிங் மற்றும் பல்வேறு மாநில பாஜக முதலமைச்சர்கள், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் வருகை புரிந்திருந்தனர். முன்னதாக தஷ்வமேத் காட்டில் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார்.
பின்னர் கால பைரவ கோயிலும் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து தேர்தல் அலுவலகம் சென்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
முன்னதாக எஸ்பிஎஸ்பி கட்சித் தலைவர் பிரகாஷ் ராஜ்பர், எல்ஜேபி கட்சித் தலைவர் சிராக் பாஸ்வான், ஜிதன்ராம் மாஞ்சி, பசுபதி பாஸ்வான் உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணியைச் சேர்ந்த பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பாஜக மாநிலத் தலைவர்கள் பேரணியாக சென்றனர். இந்தப் பேரணியில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட 12 மாநில முதல்வர்களும் பங்கேற்றனர்.
அந்த பேரணியில் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், பாஜக தேசியத் தலைவர் நட்டா, பாமக தலைவர் அன்புமணி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோரும் நடந்து சென்றனர்.
முன்மொழிந்தவர்களின் விவரம்.
1.பண்டிட் கணேஷ்வர் சாஸ்திரி, ஜோதிடர், பிராமண சமூகத்தை சேர்ந்தவர். அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்விற்கு முகூர்த்த நேரம் குறித்து கொடுத்தவர். வாரணாசி தெற்கு சட்டப்பேரவை தொகுதியை சேர்ந்தவர்.
2.பைஜ்நாத் படேல், சேவாபுரி பகுதியை சேர்ந்த அவர் ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர். ஆர்.எஸ்.எஸ் தன்னார்வலர்.
3.லால்சந்த் குஷ்வாஹா, ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்.
4.சஞ்சய் சோங்கர், தலித் சமூகத்தை சேர்ந்தவர்.
2014 தேர்தலில் பிரதமர் மோடி குஜராத்தின் வதோதரா தொகுதியிலும், வாராணசி தொகுதியிலும் போட்டியிட்டார். இதில், வதோதரா தொகுதியில் ஐந்தரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும், வாராணசியில் ஏறக்குறைய 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றிபெற்றார். பின்னர் வதோதரா தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.
2019-ல் வாராணசியில் மீண்டும் போட்டியிட்ட மோடி, சுமார் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.
பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் நேற்று கூறியிருப்பதாவது: கங்கை நதியின் தத்துப்பிள்ளை நான். எனது தாய் மறைவுக்குப் பின்னர் கங்கை குறித்து மிக நெருக்கமாக உணர்கிறேன். கங்கை என்னை வலுப்படுத்தி தேற்றியது. கங்கை நதி, தாயைப்போல் அனைவரையும் காக்கிறது.
காசியுடன் எனது உறவானது அற்புதமானது, பிரிக்க முடியாதது மற்றும் ஒப்பிடமுடியாதது. அதை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது என்றுதான் என்னால் சொல்ல முடியும். 140 கோடி மக்களுக்காக நான் உழைக்கிறேன். இது கடவுள் உத்தரவு. காசி மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதை எனது முயற்சியாக கொண்டுள்ளேன்.
பகவான் காசி விஸ்வநாதரின் ஆசியுடன், அவருடைய காசிக்கு சேவை செய்ய நான் எப்போதும் அர்ப்பணிப்புடன் இருப்பேன். இவ்வாறு பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதள பக்க பதிவில் தெரிவித்துள்ளார்.
மோடியின் சொத்து மதிப்பு ரூ.3.02 கோடி: பிரதமர் மோடி தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் தனக்கு ரூ.3.02 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துகள் உள்ளதாக தெரிவித்துள்ளார். ரொக்கமாக அவரிடம் ரூ.52,920 உள்ளது. சொந்தமாக நிலம், வீடு, கார் இல்லை என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமரின் வரிக்கு உட்பட்ட வருமானம் 2018-19-ம் நிதியாண்டில் ரூ.11 லட்சத்தில் இருந்து 2022-23-ல் ரூ.23.5 லட்சம் என 2 மடங்காக உயர்ந்துள்ளது. எஸ்பிஐ கிளையில் பிரதமருக்கு ரூ.2,85,60,338 மதிப்பிலான நிலையான வைப்புத்தொகை உள்ளது. பிரதமரிடம் ரூ.2,67,750 மதிப்பிலான 4 தங்க மோதிரங்கள் உள்ளன வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடியின் வேட்பு மனுவை பெற்ற மாவட்ட தேர்தல் அதிகாரியும் ஆட்சியருமான திரு.ராஜலிங்கம் அவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர் ஆவார். அவர்தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்தவர்.
புளியங்குடி செவன்த் டே தனியார் பள்ளியில் படித்தவர்.
2009 ஆம் ஆண்டு ஐஏஎஸ் பேட்சை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.