கர்நாடக அரசை கண்டித்து நவம்பர் 15 ல் நெய்வேலி நிலக்கரி சுரங்கம் முற்றுகை

க.பாலகுரு,
காவிரி நீர் தர மறுத்தால் நெய்வேலி மின்சாரத்தை தடுப்போம் கர்நாடக அரசை கண்டித்து நவம்பர் 15 ல் நெய்வேலி நிலக்கரி சுரங்கம் முற்றுகை என தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பிஆர்.பாண்டியன் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் அவசரக் கூட்டம் மன்னார்குடியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருவாரூர் மாவட்ட தலைவர் குடவாசல் சரவணன் தலைமையேற்றார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து செய்தியாளர்களிடம் பொதுச் செயலாளர் பி ஆர் பாண்டியன் தெரிவித்ததாவது:
தமிழ்நாட்டில் காவிரி டெல்டாவில் குறுவை 5 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு 3.50 லட்சம் ஏக்கரில் பாதிக்கப்பட்டுள்ளது. அனைத்து விவசாயிகளுக்கும் முறையான கணக்கெடுப்பு நடத்தி ஏக்கர் 1 க்கு ரூ 35 ஆயிரம் நிவாரணம் வழங்கிட வேண்டும்.
நிலத்தடி நீரை பயன்படுத்தி முடிந்த வரையிலும் சம்பா சாகுபடி தொடர்வதற்கு இலவச மின்சார இணைப்புகளை தடையின்றி வழங்க வேண்டும். 1.50 லட்சம் சிறப்பு ஒதுக்கீட்டில் வழங்கப்படும் மின் இணைப்புகள் கூட பல இடங்களில் காவிரி டெல்டாவில் இணைப்பு வழங்காமல் உபகரணங்கள் தட்டுப்பாட்டால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
3 எஎல் கட்டணம் செலுத்தியவர்கள் கூட மின் இணைப்பு பெற இயலாத நிலையில் தொடர்கிறது. முன்னுரிமை கொடுத்து அனைவருக்கும் மின் இணைப்பு வழங்குவதோடு, நிலத்தடி நீரை பயன்படுத்த வாய்ப்புள்ள அனைத்து விவசாயிகளுக்கும் நிபந்தனை இல்லாமல் உடனடியாக இலவச மின் இணைப்பு சிறப்பு ஒதுக்கீட்டில் வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற முடியாத நிலையில் விவசாயிகள் பரிதவித்து வருகிறார்கள். கூட்டுறவு வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் என்கிற பெயரால் வங்கிகள் மூடப்பட்டுள்ளது. இதனை தமிழக அரசு விவசாயிகளுக்கு கடன் கொடுப்பதை தடுத்து நிறுத்தும் உள்நோக்கத்தோடு போராட்டத்தை பேச்சுவார்த்தை நடத்தாமல் காலம் கடத்தப்படுகிறதோ?. என்று அஞ்ச தோன்றுகிறது.
உடனடியாக கூட்டுறவு வங்கிகள் செயல்பட தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படைகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொன்னார்.