டெல்லி ஆட்சிக் கட்டிலில் பாஜக! செய்தி நிறுவனங்களின் எக்சீட் போல் முடிவுகள்!

டெல்லி ஆட்சிக் கட்டிலில் பாஜக! செய்தி நிறுவனங்களின் எக்சீட் போல் முடிவுகள்!

நரேஷ்.என்,

டெல்லி சட்டப் பேரவைக்கான தேர்தல் நடைபெற்று முடிவடைந்த நிலையில் பல்வேறு செய்தி நிறுவனங்கள் எக்சீட் போல் நடத்தினர். அந்த வகையில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறும் என பெரும்பான்மையான நிறுவனங்கள் தெரிவித்திருக்கின்றன.

   டெல்லி சட்டப்பேரவை தேர்தலை, தேர்தல் ஆணையம் நேற்று பிப் 5 ஆம் நடத்தியது.  மதுபான கொள்கை வழக்கில் சிக்கி சிறைக்கு சென்று ஜாமீனில் வெளியே வந்த டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், தனது நேர்மைக்கு மக்கள் மீண்டும் சான்றளித்த பின்பே முதல்வராக வருவேன் என்ற சபதத்துடன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.  

 தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சி அமைக்க கேஜ்ரிவால் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பாஜகவை கடுமையாக விமர்சித்தார்.

 இது ஒருபக்கம் இருக்க பாஜக மூத்த தலைவர்கள் டெல்லியில் ஆட்சியை கைப்பற்ற தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். பிரதமர் மோடி பிரச்சாரத்தில் அர¢விந்த் கேஜ்ரிவாலை விமர்சித்தார். காங்கிரஸ் கட்சியும், டெல்லியில் மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற முனைப்புடன் தேர்தல் பிரச்சாரத்தில் களம் இறங்கியது.

  டெல்லியில் மொத்தம் உள்ள 70 சட்டப்பேரவை தொகுதிகளில் 1.56 கோடி வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு 13,766 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்தல் பாதுகாப்பு பணியில் பாதுகாப்பு படை வீரர்கள் ஆயிரக்கணக்கானோர் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

  இந்நிலையில் மக்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். மாலை 6 மணியளவில் வாக்குப் பதிவு நிறைவடைந்தது. நேற்று மாலை 5 மணி நிலவரப்படி 57.7 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

   நாளை மறுதினம் பிப்-8 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

 அப்படியிருக்க தேர்தல் நேற்று மாலை முடிவடைந்ததையடுத்து, வழக்கம்போல் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாயின.

 அதில், என்டிடிவி வெளியிட்ட முடிவில் ஆம் ஆத்மி 10 முதல் 19 இடங்களையும், பாஜக 51-60 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவித்தது.

   டைம்ஸ் நவ் வெளியிட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் ஆம் ஆத்மி 32 முதல் 37 இடங்களையும், பாஜக 37-43 இடங்களையும், காங்கிரஸ் 2 இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டது.

  சிஎன்என் வெளியிட்ட முடிவில் ஆம் ஆத்மி 30 இடங்களையும் பாஜக 40 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவித்தது.

  பல கருத்துக் கணிப்பு முடிவுகள் பாஜக வெற்றி பெறும் என்றே தெரிவித்துள்ளன.