1200 வாக்காளர்களுக்கு மேல் உள்ளனரா? கூடுதல் வாக்குசாவடி என ஆட்சியர் தகவல்!

கு.அசோக்,
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி அவர்கள் தலைமையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நேற்று வாக்காளர்கள் மற்றும் வாக்குச்சாவடிகள் குறித்த அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடனான ஆலோசனைக்கூட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது.
இந்த கூட்டத்தில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் வாக்குச்சாவடி மையங்களை கூடுதலாக ஏற்படுத்த வேண்டும். போலியான வாக்காளர் பெயர்களை நீக்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது.
அரசியல் கட்சியினரின் கோரிக்கைகள் தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள வழிகாட்டுதலின்படி நடவடிக்கை எடுக்கப்படும் மேலும் இக்கூட்டத்தில் அரசியல் கட்சி பிரமுகர்கள் தெரிவித்துள்ள இதர ஆலோசனைகள் தேர்தல் ஆணையத்தின் பார்வைக்கு கொண்டு செல்லப்படும் என தெரிவித்தார்.
மேலும் இறந்த வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம் தொடர்பாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நேரடியாக கள ஆய்வு செய்து அதனை நீக்குவார்கள். அதே நேரத்தில் அரசியல் கட்சி பிரமுகர்களும் வாக்குச்சாவடி முகவர்களின் மூலம் இறந்தவர்களின் விவரங்களை தெரிவித்தால் அது குறித்து விசாரித்து நேரடி விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
வேலூர் மாவட்டத்தில் 1200 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளில் கூடுதலான வாக்குச் சாவடிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு வாக்காளரும் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்குள் வாக்களிக்க கூடிய வகையிலே இத்தகைய நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது. வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைத்துள்ள வாக்காளர்களின் விவரம் குறித்து அரசியல் கட்சி பிரமுகர்கள் கோரிக்கை எழுப்பினர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் 23 சதவீதம் வாக்காளர்கள் தங்களுடைய ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்துள்ளனர் என்று இப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறினார்.
இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன், வருவாய் கோட்டாட்சியர்கள் செந்தில் குமரன் (வேலூர்), சுபலட்சுமி (குடியாத்தம்) உட்பட பலர் கலந்து கொண்டனர்.