வேலூர் சத்துவாச்சாரியில் 9 அடுக்கு அபார்ட்மென்ட்! அமைச்சர் முத்துசாமி தகவல்!

வேலூர் சத்துவாச்சாரியில் 9 அடுக்கு அபார்ட்மென்ட்! அமைச்சர் முத்துசாமி தகவல்!

 ஜி.கே.சேகரன்,

  வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி வேலூர் மாவட்டத்தில் வீட்டு வசதி துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட உள்ள திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார் - சத்துவாச்சாரியில் 9 அடுக்கு அபார்ட்மென்ட் கட்டப்படும் என தகவல்.

  வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர்  முத்துசாமி   வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டம் கொண்டசமுத்திரம் ஊராட்சியில் வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் ரூ.8.50 கோடி  மதிப்பில் 465  மனைகளுடன் அமைய உள்ள திட்டப் பணி குறித்தும்வேலூர் மாநகராட்சி சத்துவாச்சாரி பகுதி 3 ல் ரூ. 8 கோடி மதிப்பில் 9 தளத்தில் 48 அலகுகளுடன் அமையவுள்ள சர்வீஸ் அபார்ட்மெண்ட் திட்டப் பணி குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

   பின்னர் அமைச்சர் முத்துசாமி கூறுகையில்,

  குடியாத்தம் வட்டம், கொண்டசமுத்திரம் பகுதியில் 25 ஏக்கர் பரப்பளவில் வீட்டு மனைப்பிரிவுகள் அமைய உள்ளது. இந்த இடத்தில் மொத்தம் 30 ஏக்கர் அளவிற்கு இடம் இருந்தது. அதில் 4.75 ஏக்கர் புதியதாக வரவுள்ள சாலை பணிக்காக வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் கொடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 25 ஏக்கர் பரப்பில் 465 மனைகள் உருவாக்கப்படவுள்ளது.

   தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உருவாக்கப்படுகின்ற திட்டங்கள் அதிகமாக இருப்பதை விட அவற்றின் தரம் நல்ல முறையில் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் உட்பட தமிழ்நாடு முழுவதும் இது போன்ற மனை பிரிவுகள்  அமைக்கும் பணிகள் வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் நடைபெற்று வருகிறது. இந்த அரசின் நோக்கம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பொதுமக்கள் பயனடையும் வகையில்  சிறப்பாக இருக்க வேண்டும் என்பதே ஆகும்.

  இந்த மனைகளுக்கான விற்பனை ஜனவரி மாதத்தில் தொடங்கப்படும். விற்பனையானது நிலத்தின் மதிப்பு, மேம்பாட்டு பணிகளுக்கான மதிப்பு போன்ற பல்வேறு செலவினங்களை கணக்கிட்டு இலாப நோக்கம் இல்லாமல் பொதுமக்களுக்கு விற்கப்படும். இந்த மனைப் பிரிவில் மழை நீர் வராத அளவிற்கு வடிகால் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

   வேலூர் சத்துவாச்சாரி பகுதியில் வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் சர்வீஸ் அபார்ட்மெண்ட் கட்டப்பட உள்ளது. இந்தப் பணி சுமார் ஒன்றரை ஆண்டு காலத்தில் முடிவடையும். இந்த இடத்தில் 9 தளங்களுடன் 48 அலகுகள் கட்டப்பட உள்ளது. இத்திட்டப் பணிக்கு தோராய மதிப்பீடாக ரூபாய் 10 கோடி திட்ட மதிப்பீடு கணக்கிடப்பட்டுள்ளது.

  வேலூரில் கல்லூரி, மருத்துவமனை போன்ற பல்வேறு வசதிகள் உள்ளது. மருத்துவ சிகிச்சைக்கு வரும் பொதுமக்கள் மற்றும் கல்லூரி மேற்படிப்பிற்காக வரும் மாணவர்களுக்கும் தங்குவதற்காக இங்கே வீடுகள் கிடைப்பது சிரமமாக உள்ளது என்பதாலும் சர்வீஸ் அபார்ட்மெண்ட் அமைத்தால் பொதுமக்களுக்குசிறப்பான வகையில் அது பயன்படும் என்பதாலும் இத்திட்டம் இங்கு மேற்கொள்ளப்பட உள்ளது.

   தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எந்த திட்டங்களை நிறைவேற்றினாலும் பொது மக்களுக்கு நீண்ட காலம் பயனடையும் வகையில் தரமாக அமைய வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்கள்.

   இந்த சர்வீஸ் அபார்ட்மெண்ட்டானது சிறந்த கட்டிட வடிவமைப்புடன் தரமாக தேவையான அனைத்து அடிப்படை வசதிகளுடன் சிறப்பாக கட்டப்படும் என   அமைச்சர் முத்துசாமி அவர்கள் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சித்தலைவர்   குமாரவேல் பாண்டியன் உடன் இருந்தனர்