241 கோடி ஊழல் புகார்:- சந்திரபாபு நாயுடுவை அலேக்காக தூக்கிய போலிஸ்!ஊழல்வாதியாக சித்தரிக்க முயற்சி என பேட்டி!

ம.பா.கெஜராஜ்,
ஆந்திரமாநிலம், நந்தியாலாவில் பொதுக்கூட்டம் முடித்துவிட்டு நள்ளிரவில் வாகனத்தில் உறங்கிக்கொண்டிருந்த அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான நாரா.சந்திரபாபுநாயுடுவை போலிசார் அதிகாலையில் கைது செய்தனர்.
மாநில அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. சிஐடி அதிகாரிகள் கைது வாரண்டுக்கான உத்தரவை அவரிடம் வழங்கினர். சந்திரபாபு கைது செய்யப்பட்ட செய்தியால் அம்மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சந்திரபாபுவை விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முயற்சி எடுக்கப்பட்ட நிலையில் அதற்காக ஹெலிகாப்டர் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.
அங்கிருந்து விஜயவாடாவுக்கு செல்ல முடிவு செய்யப்பட்டிருந்தது.
சந்திரபாபு நாயுடு மீது ஏற்கனவே திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. முதல்-மந்திரியாக இருந்த காலத்தில் மாநிலத்தில் புதிய ஐடி நிறுவனங்கள் அமைக்க அனுமதி கொடுப்பதற்கு சட்டவிரோதமாக 241 கோடி ரூபாய் பெற்றதாக சந்திரபாபு நாயுடு மீது ஊழல் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் விசாரணை நடைபெற்ற நிலையில் சந்திரபாபு நாயுடுவை போலீசார் இன்று கைது செய்தனர். நந்தியாலா பகுதியில் நேற்று கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற சந்திரபாபு நாயுடு தனது வாகனத்தில் இரவு ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது, இன்று அதிகாலை 3 மணியளவில் நந்தியாலா போலீஸ் டிஐஜி தலைமையில் அதிக அளவிலான போலீசார் சந்திரபாபுவை கைது செய்ய சென்றனர்.
அதற்கு அங்குகூடியிருந்த தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள் போலீசாருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதேபோல், சந்திரபாபு நாயுடு எஸ்பிஜி எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படைப்பிரிவின் பாதுகாப்பில் உள்ளதால் சட்டப்படி அதிகாலை 5.30 மணிவரை அவரை அழைத்து செல்ல அனுமதிக்க முடியாது என்று எஸ்பிஜி படைப்பிரிவினர் தெரிவித்தனர்.
அதனை தொடர்ந்து போலீசார், சந்திரபாபு நாயுடுவை காலை 6 மணிக்கு கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சந்திரபாபு நாயுடு விஜயவாடா அழைத்து செல்லப்பட்டார். ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்ட சம்பவம்ரம்மாநிலத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இதே திறன் மேம்பாட்டு வழக்கில் சிலருக்கு முன்ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது. இதே வழக்கில் சமீபத்தில் ஒரு ஆடிட்டர் சிஐடி அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
முன்னதாக, நான் தாக்கப்படுவேன் அல்லது கைது செய்யப்படுவேன் என சந்திரபாபு நாயுடு தெரிவித்திருந்தார் என்பது நினைவுகூறதக்கதாகும்.
இந்நிலையில் அவரை கைது செய்த போது போலிசாருடன் நாயுடு வாக்குவாதம் செய்தார். என்னை கைது செய்ய எதற்காக அதிகாலை வருகிறீர்கள், நான் ஒரு முன்னாள் முதல்வர், ஓடியா போகப்போகிறேன்னெனக்கு எஸ்ஜிபி பாதுகாப்பு படை உள்ளது, தொண்டர்கள் உள்ளார்கள், எனக்கு பிபி சுகர் இருக்கு, நான் எந்த குற்றமும் செய்யவில்லை, தேர்தலுக்கு முன்னர் என்னை ஊழல்வாதியாக சித்தரிக்க முயல்கிறார்கள், ஜெகன்மோகன் ரெட்டிதான் உண்மையான ஊழல்வாதி. அது மக்களுக்கு தெரியும் என்று சொன்னார்.
இந்நிலையில் நாயுடு கைது எதிரொலியாக அம்மாநிலம் முழுவதிலும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக தமிழக ஆந்திரா எல்லையோரம் பேருந்துகள் நிறுத்தப்பட்டிருக்கிறன.