2000 பாலியல் வீடியோக்கள்:-நாடு திரும்பிய தேவகவுடா பேரன் கைது!

டி.இ.முகமது,

VIDEO;- 2000 பாலியல் வீடியோக்கள்:-நாடு திரும்பிய தேவகவுடா பேரன் கைது!

பாலியல் வழக்கில் சிக்கிய தேவகவுடாவின் பேரனான பிரஜ்வல் ரேவண்ணா இன்று ஜெர்மனியில் இருந்து விமானம் மூலம் இந்தியா திரும்பினார். பெங்களூரு விமான நிலையத்தில் அவரை போலீஸார் கைது செய்தனர்.

 முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் ஹாசன் மக்களவை தொகுதி எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா (33) மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டார். அங்கு கடந்த 26-ம் தேதி வாக்குப்பதிவு நடந்த நிலையில், அவர் பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் சுமார் 3 ஆயிரம் வீடியோக்கள் வெளியானது.

  தொடர்ச்சியாக அவருடைய வீட்டில் வேலைசெய்து வந்த பெண், மஜத முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் உட்பட 4 பெண்கள் அளித்த புகாரின்பேரில் பிரஜ்வல் மீது 4 பாலியல் வன் கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

 அவர் கடந்த ஏப்ரல் 26-ம் தேதி இரவு ஜெர்மனிக்கு தப்பிவிட்டார். சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸார் 2 முறை லுக் அவுட் நோட்டீஸும் ஒரு முறை புளூ கார்னர் நோட்டீஸும் பிறப்பித்தனர். அவரது தூதரக பாஸ்போர்ட்டை முடக்குமாறு வெளியுறவுத் துறைக்கு கடிதம் எழுதினர்.

  பிரச்சனையை உணர்ந்த தேவகவுடா உள்ளிட்டோர் உடனடியாக நாடு திரும்புமாறு பிரஜ்வலுக்கு கோரிக்கை விடுத்தனர்.

 அதன் பின்னர், பிரஜ்வல் ரேவண்ணா வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், ''மே 31-ம் தேதிகாலை 10 மணிக்கு சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸார் முன்னிலையில் நேரில் ஆஜராகிறேன். இந்த வழக்கை சட்டப்படி எதிர்கொள்வேன்'' என தெரிவித்தார்.

  இது ஒரு புறம் இருக்க, பிரஜ்வல் ரேவண்ணா தரப்பில் முன் ஜாமீன் கோரி பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அவர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் தனஞ்செய், ''இந்த மனுவை அவசர மனுவாக கருதி உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்'' என கோரினார்.

  அதனை ஏற்க மறுத்த நீதிபதி, மே 31 வழக்கை விசாரிப்பதாக கூறினார். அதன்படி இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

  இந்த நிலையில் ஜெர்மனியின் முனிச் நகரில் இருந்து பெங்களூரு திரும்புவதற்கான விமான டிக்கெட்டை பிரஜ்வல் முன்பதிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது.

 இதனையடுத்து நேற்று (மே 30) முனிச் நகரில் இருந்து புறப்பட்ட அவர் இன்று அதிகாலை 1.30 மணியளவில் பெங்களூரு திரும்பினார்.

 கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய பிரஜ்வல் ரேவண்ணாவை சிறப்பு விசாரணைக் குழு தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

  அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.