பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த 11 இந்தியர்கள் கைது!
ம.பா.கெஜராஜ்,
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த 11 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவில் பாகிஸ்தானின் உளவு நெட்வொர்க்கை தகர்க்கும் நடவடிக்கையில் அதிகாரிகள் மும்முரம் காட்டி வருகின்றனர்.
அந்த வகையில், பஞ்சாப், ஹரியானா மற்றும் உ.பி.யில் 11 பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அவர்களின் விவரங்கள் வருமாறு,
அர்மான் (23): இவர், ஹரியானாவின் நூ மாவட்டத்தில் 16-ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் உச்சத்தில் இருந்தபோது முக்கிய தகவல்களை இவர் பகிர்ந்து கொண்டதாக இவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
தேவேந்திர சிங் தில்லான் (25): இவர், பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள கல்சா கல்லூரியின் எம்ஏ (அரசியல் அறிவியல்) முதலாமாண்டு மாணவர்.சிறிது காலத்துக்கு முன்பு ஐஎஸ்ஐ உடன் இவருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதன் பிறகு இந்தியாவுக்கு எதிராக உளவு நடவடிக்கையில் ஈடுபடத் தொடங்கினார். இவர் கடந்த 12-ம் தேதி ஹரியானாவில் கைது செய்யப்பட்டார். இவர் கடந்த 2004-ல் பாகிஸ்தான் எல்லையில் உள்ள கர்தாபூர் சாகிப் சென்றுள்ளார். அப்போது ஐஎஸ்ஐ அதிகாரிகளிடம் பாட்டியாலா ராணுவ கன்டோன்மென்ட் படங்கள் உட்பட முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
முகம்மது டரிப்: இவர், ஹரியானாவின் நூ மாவட்டம் கங்கர்கா கிராமத்தை சேர்ந்தவர். இவர் சிர்சா விமானப் படை தளம் உட்பட பாகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து பாகிஸ்தானுடன் பகிர்ந்து வந்துள்ளார்.
நவுமான் இலாகி: ஹரியானாவில் காவலாளியாக பணியாற்றி வந்த இவர் பானிபட் நகரில் சில நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். உ.பி.யை சேர்ந்த இவர் பாகிஸ்தானில் உள்ள ஐஎஸ்ஐ ஆட்களுடன் தொடர்பில் இருந்துள்ளார். உளவுத் தகவல்களுக்கு பாகிஸ்தானில் இருந்து தனது மைத்துனரின் வங்கிக் கணக்கில் பணம் பெற்று வந்துள்ளார்.
ஷாஜாத்: உ.பி.யின் ராம்பூரில் சொந்த தொழில்நடத்தி வருபவர் ஷாஜாத், மொராதாபாத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார். இவர் பலமுறை பாகிஸ்தான் சென்று வந்துள்ளார். தேசப் பாதுகாப்பு தொடர்பான தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். மேலும் அங்கிருந்து அழகுசாதனப் பொருட்கள், துணிகள் மற்றும் மசாலாப் பொருட்களை கடத்தி வந்துள்ளார்.
முகம்மது முர்தாசா அலி: ஜலந்தரில் நடந்த சோதனையில் இவர் கைது செய்யப்பட்டார். இவரே உருவாக்கிய மொபைல் செயலி மூலம் தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். இவரிடம் 4 மொபைல் போன்கள் மற்றும் 3 சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஜோதி மல்ஹோத்ரா: இவர், ஹரியானா மாநிலம் ஹிசார் நகரை சேர்ந்த 33 வயது யூடியூபர். 'டிராவல் வித் ஜேஓ' என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றிய டேனிஷ் என்ற அதிகாரியுடன் இவருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. மேலும் டெல்லியில் அசன்-உர்-ரஹிம் பாகிஸ்தான் அதிகாரியை சந்தித்துள்ளார். கடந்த 2004-ல் இவர் 2 முறை பாகிஸ்தான் சென்று ரகசிய தகவல்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.
அதே போல் பஞ்சாபில் கசாலா என்ற பெண் மற்றும் யாமின் முகம்மது, சுக்பிரீத் சிங், கரன்பீர் சிங் என்ற 3 இளைஞர்களை உளவு நடவடிக்கைக்காக போலீஸார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

admin
