தமிழகத்திலிருந்து ஆந்திராவிற்கு கடத்தவிருந்த 1.200 டன் ரேஷன் அரிசி பறிமுதல் -2 பேர் கைது.!

கு.அசோக்,
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே பத்தலபள்ளி பகுதியில் சிலர் கள்ளத்தனமாக ரேஷன் அரிசி பதுக்கி வைத்து, ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு கடத்தப்படுவதாக ஃபுட்செல் போலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில், வேலூர் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்பிரிவு புலனாய்வு அதிகாரிகள் இன்று அதிகாலை பத்தலப்பள்ளி தாபா அருகே பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்பொழுது அவ்வழியே வந்த கர்நாடகா பதிவு எண் கொண்ட டாடா ஏஸ் வாகனத்தை மடக்கி சோதனை செய்தனர். அதில் தமிழக அரசால் பொது மக்களுக்கு விநியோகிக்கப்படும் 1200 கிலோ ரேஷன் அரிசி ஆந்திராவிற்கு கடத்தப்படுவது தெரிய வந்தது.
இதனை அடுத்து ரேஷன் அரிசி கடத்தி வந்த பேர்ணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த பொன்ராஜ் (38) முகமது இஸ்மாயில் (32) ஆகிய இரண்டு பேரை கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டாட்டா ஏஸ் வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட 1500 கிலோ ரேஷன் அரிசியை நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்.