அப்பாவியை கட்டிவைத்து அடிக்கத் தூண்டிய எஸ்.ஐ.!

ஜி.கே.சேகரன்,
அப்பாவியை கட்டிவைத்து அடிக்கத் தூண்டிய எஸ்.எஸ்.ஐ. அப்படியே தகவலை மாற்றி கூறி உயரதிகாரிகளிடமிருந்து தப்பித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த செட்டியப்பணூர் கூட்டு சாலையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அவ்வழியாக முரளிதரன் என்பவர் இருசக்கர வாகனத்தில் மனைவியுடன் சென்றுள்ளார். அவரை நிறுத்தி ஆர்.சி.புத்தகம் கேட்டிருக்கிறார் எஸ்.எஸ்.ஐ.குணசேகரன்.
நின்று பதிலளித்த அந்த வாகன ஓட்டி, சார் புத்தகம் வீட்டில் உள்ளது. போய் எடுத்து வருகிறேன் என்று சொல்லிவிட்டு சென்றார்.
பின்னர் அவரது மனைவியை வீட்டில் விட்டுவிட்டு, சொன்னபடியே வந்த அந்த நபர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த எஸ்.எஸ்.ஐ.யிடம் ஆர்.சி.புத்தகத்தை காட்டியிருக்கிறார்.
அப்படி காட்டும்போது தனது செல்போனை ஆன் செய்து படம் பிடித்துள்ளார். அதை பார்த்த எஸ்.எஸ்.ஐ. வாகன ஓட்டியை கண்டித்துள்ளார்.
இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கட்டிபிடித்து உருண்டுள்ளனர்.
இந்த தள்ளுமுள்ளுவை எஸ்.எஸ்.ஐ.யால் தாக்கு பிடிக்க முடியாமல் திணறினார்.
இதனைப் பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் இருவரையும் பிரிக்க முயன்றும் முடியவில்லை. பொதுமக்கள் உதவியுடன் முரளிதரனை பிடித்து கம்பத்தில் கட்டி வைத்து அடித்துள்ளனர்.
பின்னர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து அவரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டதில் முரளிதரன் வாணியம்பாடி அடுத்த சின்னவேப்பம்பட்டு பகுதியை சேர்ந்தவர் என்பதும் இவர் சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள ஐ டி நிறுவனத்தில் வேலை செய்து வருவது தெரிய வந்துள்ளது.
முரளிதரன் காவல் துறையினரிடம் மன்னிப்பு கேட்டதால் சிலமணி நேரம் கழித்து விடுவிக்கப்பட்டார். அதே போல் பழியை வாகன ஓட்டி மீது சுமத்திவிட்டதால் உயரதிகாரிகளின் நடவடிக்கைக்கு எஸ்.எஸ்.ஐ.குணசேகரன் ஆளாகவில்லை.
எது எப்படியோ தள்ளுமுள்ளுவுக்கு தாக்கு பிடிக்க முடியாதவர் எல்லாம் டுயூட்டி பார்த்தால் இப்படித்தான் ஆகும் என்கிறார்கள்.