பரிசு கொடுத்தும் ஆர்வம் காட்டாத வேலூர் வாசிகள்!

ஜி.கே.சேகரன்,
ஆயிரம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. அதில் பல முகாம்களில் பரிசுபொருட்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இருப்பினும் தடுப்பூசி போட்டுகொள்ள மக்கள் ஆர்வம் காட்டாததால் முகாம்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
வேலூர் மாவட்டத்தில் இன்று ஐந்தாம் கட்டமாக கொரோனா தடுப்பூசி முகாம்கள் நிறுவப்பட்டன. பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், மலைபகுதிகள் உள்ளிட்ட ஆயிரம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடந்தது.
இதில், தடுப்பூசி செலுத்திகொள்ளும் மக்களுக்கு குலுக்கல் முறையில் டிவி,பிரிட்ஜ்,வாஷிங்க் மெஷின் ,மிக்சி,கிரைண்டர் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கபடும் என அறிவித்தும் மக்கள் அவ்வளவாக கொரோனா தடுப்பூசியினை செலுத்திகொள்ள ஆர்வம் காட்டவில்லை.
பெரும்பாலான முகாம்களில் சுகாதார பணியாளர்கள் செவிலியர்கள் மட்டும் இருந்தனர். யாராவது தடுப்பூசி போட்டுகொள்ள வருவார்களா என காத்திருக்கும் நிலை உருவானது.
இந்த நிலையில் வேலூர் ஓட்டேரியில் உள்ள பிரியா மஹாலில் மாநகராட்சி சார்பில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமினை வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தார்.
மேலும் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி போட்டுகொண்ட பெண்களுக்கு சேலைகள் பரிசாக வழங்கப்பட்டது.
இதில் பெண்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு கொரோனா தடுப்பூசியினை செலுத்திகொண்டனர்.