எதை நோக்கி பயணிக்கிறது விசிக!'ஆட்சி, "அதிகாரத்தில் பங்கு' நீக்கப்பட்ட பதிவு!

ம.பா.கெஜராஜ்,
'ஆட்சி, அதிகாரத்தில் பங்கு' என்று பேசப்பட்ட பழைய கிளிப்பிங்ஸை மீண்டும் பதிவு செய்து பின்னர் நீக்கிய விசிக எதை நோக்கி பயணிக்கிறது என்பதை யூகிக்க முடிகிறது என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
விசிக தலைவர் திருமாவளவன் கடந்த "2016-ல் கூட்டணி ஆட்சி என்று பேசியிருந்தார். அதில் எங்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு அல்ல, அமைச்சரவையில் அதிகாரப் பங்கு வேண்டும் எனக் கேட்டோம்" என அவர் கேட்டிருப்பார். இந்த பழைய வீடியோ திருமாவளவனின் எக்ஸ் பக்கத்தில் நேற்று செப்-14 பகிரப்பட்டிருந்தது.
ஆனால் அது சற்று நேரத்தில் நீக்கப்பட்ட்டது.
இந்நிலையில், வரும் அக்.2-ம் தேதி உளுந்தூர்பேட்டையில், விசிக சார்பில் மது ஒழிப்பு மகளிர் மாநாடு நடத்தப்போவதாக அறிவித்த திருமாவளவன் மாநாட்டில் அதிமுகவும் பங்கேற்கலாம் என அழைப்பு விடுத்தார். திருமாவளவன் திமுக கூட்டணியில் இருந்தபடியே, அதிமுகவுக்கு அழைப்பு விடுத்ததால் இது தமிழக அரசியலில் பரபரப்பை கொளுத்தி போட்டது.
"கடைசி மனிதனுக்கும் சனநாயகம்!
— Thol. Thirumavalavan (@thirumaofficial) September 14, 2024
எளிய மக்களுக்கும் அதிகாரம்!
ஆட்சியிலும் பங்கு !அதிகாரத்திலும் பங்கு ! - என 1999ல் தேர்தல் பாதையில் அடியெடுத்து வைத்த போதே உரத்து முழங்கிய இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி " -
என்று கடந்த செப்-12 ஆம் தேதி மறைமலை நகரில் நடைபெற்ற மண்டல… pic.twitter.com/ukP8YXsfqR
இந்நிலையில், ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்டு பேசும் அவரது பழைய பேச்சு அடங்கிய வீடியோ எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டு, பின்னர் அதனை உடனடியாக நீக்கியதும் கவனம் பெற்றது.
மதுரையில் இச்சம்பவம் குறித்த கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன், "கடைசி மனிதனுக்கும் ஜனநாயகம், எளிய மக்களுக்கும் அதிகாரம் என, 1999-ல் பேசினேன். இதை நினைவுபடுத்தி செங்கல்பட்டில் நான் பேசியதை எனது, அட்மின் எடுத்து சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
ஏன் அதை நீக்கினார்? எனத் தெரியவில்லை. இன்னும் எனது அட்மினை தொடர்பு கொண்டு பேசவில்லை. அதிகாரம் எளிய மக்களுக்கும் பகிர்ந்து அளிக்க வேண்டும் என்பதுதான் எப்போதும் எங்கள் கோரிக்கை. எனக்கு உண்மையில் அரசாங்கத்தில் பங்கு வேண்டும் என நினைத்திருந்தால் தேர்தல் நேரத்தில் கேட்டிருப்பேன். இப்போது கேட்க வேண்டிய அவசியமில்லை. தேர்தல் அரசியலோடு இதை முடிச்சு போடக் கூடாது," என சொல்லியிருக்கிறார்.