தமிழர்கள் மீது அபாண்டமாக பழி சுமத்தும் மத்திய அமைச்சர் ஷோபா! முதல்வர் - எதிர்கட்சி தலைவர் ஆவேசம்!

டி,இ.முகமது,
மக்களவை தேர்தல் நெருங்கும் நேரத்தில் தமிழர்கள் மீது அபாண்டமாக பழி சுமத்தி பிரிவினையை தூண்ட முயற்சி செய்திருக்கிறார் கர்நாடகாவைச் சேந்த மத்திய அமைச்சர் ஷோபா.
இதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமி ஆகியோர் கடுமையான கண்டணங்களை வெளியிட்டிருக்கிறார்கள்.
மு.க.ஸ்டாலின்
பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பில் தமிழர்களை தொடர்புபடுத்தி பேசிய ஒன்றிய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜேவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அமைதி, நல்லிணக்கம், ஒற்றுமைக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் பேசிய அமைச்சர் ஷோபா மீது தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி
தமிழ்நாட்டு மக்களை பொதுப்படையாக பயங்கரவாதிகள் போல சித்தரிக்கும் வகையில் பாஜக அமைச்சர் ஷோபா பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுபோன்ற பிரிவினைவாதப் பேச்சுகளை இனியும் யாரும் பேசாத வகையில் இந்திய தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எடப்பாடி வலியுறுத்தியுள்ளார்.
ஷோபாவின் சர்ச்சை பேச்சு
கடந்த மார்ச் 1ஆம் தேதி பெங்களூர் ப்ரூக் பீல்ட் பகுதியில் உள்ள ராமேஸ்வரம் கபே உணவகத்தில் அடுத்தடுத்து இரண்டு வெடிகுண்டுகள் வெடித்துச் சிதறின. இதில் 10 பேர் படுகாயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக ஒருவரை கைது செய்து, பெங்களூர் மாநகர குற்றப்பிரிவு, தேசிய புலனாய்வு முகமை ஆகிய அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன.
பாஜக அமைச்சர் ஷோபாவின் பிரிவினை பேச்சு.
பாஜகவை சேர்ந்த மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை, உணவு பதப்படுத்தும் தொழில் துறை இணை அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே, தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் வந்து எங்கள் (கர்நாடகா) ஹோட்டலில் வெடிகுண்டுகளை வைக்கிறார்கள் என்று பேசியுள்ளார்.
பாஜகவின் தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றின்போது பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் ஷோபா தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் வந்து எங்கள் ஓட்டலில் வெடிகுண்டுகளை வைக்கிறார்கள். எங்கள் மாநிலம் மீது தாக்குதல் நடத்துகின்றனர். அவர்கள் மீது கர்நாடகா மாநில காங்கிரஸ் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இன்னும் சிலர் வேறு இடங்களில் இருந்து வந்து "பாகிஸ்தான் ஜிந்தாபாத்" என்று கோஷம் போடுகிறார்கள். அவர்களை தடுப்பது இல்லை. மேலும் கேரளாவில் இருந்து வருபவர்கள் இங்கு மாணவர்கள் மீது ஆசிட் வீசுகிறார்கள், அப்படி செய்யபவர்கள் மீது கர்நாடகா மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" என்று அண்டை மாநிலங்களை வம்புக்கு இழுத்தார்.
தேர்தல் நெருங்கும் சூழலில் பாஜகவின் ஷோபா கரந்தலாஜே முன்வைத்துள்ள இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஷோபா கரந்தலாஜேவின் இந்த கருத்துக்கு சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தேர்தல் நேரத்தில் மக்களை தூண்டி விட்டு வெறுப்பை பரவி, பிரிவினைக்கு வித்திடுவதாக அவரை விளாசி வருகிறார்கள்.