சைலேந்திரபாபுவுக்காக அரசியல்கட்சியினரை குரல் கொடுக்கவைக்கின்றனர்!

ஜி.சாந்தகுமார்,
முன்னாள் டிஜிபி சி.சைலேந்திரபாபுக்கு 'டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவியை தமிழக அரசு அளிக்க முன்வந்த நிலையில், அவருடன் 8 உறுப்பினர்களையும் நியமித்து அதற்கான ஃபைல்கள் ஆளுநர் மாளிகையின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டது.
ஆனால் அந்த நியமனத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை. 62 வயதுக்கு மூன்று மாதம் இருக்கும் நிலையில் பதவிகாலம் முடிவது விதிகளுக்கு புறம்பானது. ஆகவே சைலேந்திரபாபு அதற்கு தோதுபட்டு வரமாட்டார் எனவே, வேறொருவரை தலைவராக பரிந்துரைக்க வேண்டும்' என்று தெரிவித்து, இதுதொடர்பான ஃபைலை கடந்த ஆகஸ்டு மாதம் தமிழக அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் திருப்பி அனுப்பிவைத்துவிட்டார்.
இந்த பதவிகளுக்கான விண்ணப்பம் குறித்து வெளியிடப்பட்ட விளம்பரம், பெறப்பட்ட விண்ணப்பங்கள், தலைவர் - உறுப்பினர் பதவிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டவர்களின் விவரங்கள், அவர்கள் இறுதி செய்யப்பட்டது எப்படி? நியமனம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் முறையாக பின்பற்றப்பட்டுள்ளதா என்பது உட்பட பல்வேறு விவரங்களை அதில் ஆளுநர் விணா எழுப்பியிருக்கிறார்.
இதையடுத்து, உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல் முறையாக பின்பற்றப்பட்டுள்ளதாகவும், நியமனம் தொடர்பான அறிவிப்பு வெளிப்படையாக விளம்பரம் செய்யப்பட்டது உள்ளிட்ட தகவல்களுடன் தமிழக அரசு சார்பில் ஆகஸ்ட் மாத இறுதியில் மீண்டும் ஆளுநருக்கு கோப்புகள் அனுப்பப்பட்டன.
அப்படியிருக்க 'டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை' என்பது உள்ளிட்ட அதே காரணங்களை பல்வேறு காரணங்களை தெரிவித்து, வேறொருவரை தலைவராக பரிந்துரைக்குமாறு சமீபத்தில் தமிழக அரசுக்கு அந்த ஃபைலை ஆளுநர் மீண்டும் திருப்பி அனுப்பிவைத்திருக்கிறார்.
இதற்கு அரசியல் தலைவர்களை விட்டு குரல் கொடுக்கவைத்து அந்த பிரச்சனையை மீண்டும் கிளறியிருக்கிறார்கள்.
அரசு சைலேந்திரபாபுவுக்கு ஏன் இப்படி முட்டுக் கொடுக்க வேண்டும், ஆளுநர் சுட்டிக்காட்டியிருக்கும் குறைகளை நிவர்த்தி செய்வதுடன், வயது உட்பட்ட நியமன விதிமுறைகள் சரியாக இருக்கா என்பதை உறுதி செய்துவிட்டு மீண்டும் கோப்பை ஆளுநருக்கு அனுப்புவதை விடுத்து மதிமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளை விட்டு குரல் கொடுப்பதா என்று மக்கள் கேட்கிறார்கள்.