ஷூ தொழிற்சாலை ஊழியர்களை பாடாய்படுத்தும் நிர்வாகம்! கண்ணைக் கட்டிக்கொண்டிருக்கும் தொழிலாளர் நல அலுவலர்கள்!

ஜி.கே.சேகரன்,
ஆம்பூர் அருகேலுள்ள மொஹிப் ஷூஸ் (பி) லிட் என்கிற காலணி தொழிற்சாலையில் போனஸ் மற்றும் மாத ஊதியம் சரிவர வழங்காததை கண்டித்து தொழிற்சாலையை முற்றுகையிட்டு தொழிலாளர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலத்தில் செயல்பட்டு வரும் மொஹிப் ஷூஸ் (பி) லிட் என்கிற காலணி தொழிற்சாலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொழிலாளர்கள் வஞ்சிக்கப்பட்டு வருகிறார்கள்.
பொங்கல், தீபாவளி, போனஸ், தொழிலாளா வைப்புநிதி மற்றும் மாத ஊதியம் வழங்காமல் தொழிற்சாலை நிர்வாகத்தினர் காலம் தாழ்த்தி வருவதை வாடிக்கையாக கொண்டிருந்தனர்.
நிர்வாகத்திடம் பல முறை கேட்டுப் பார்த்தும் அவர்கள் காது கொடுத்து கேட்பதில்லை. ஆகவே தொழிற்சாலையில் பணியாற்றும் ஆண், பெண் தொழிலாளர்கள் 500க்கும் மேற்பட்டோர் கடந்த இரண்டு தினங்களாக தொழிற்சாலை வளாகத்திலேயே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வந்தனர்.
ஆனாலும் கூட தொழிற்சாலை நிர்வாகத்தினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் வெறுப்படைந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் தொழிற்சாலை வளாகத்தின் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் அறிவழகன் மற்றும் வருவாய்துறையினர், போராட்டத்தில் ஈடுப்பட்ட தொழிலாளர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டு, தொழிற்சாலை நிர்வாகத்தினரிடம் பேசி, ஊதியம் மற்றும் போனஸ் வழங்குவது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தின் பேரில், போராட்டத்தை கைவிட்டு தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.
இவ்ளோ பிரச்சனை நடந்தும் கூட தொழிலாளர் நல அலுவலகத்தைச் சேர்ந்தவர்கள் கண்ணை கட்டிக்கொண்டு அமைதியாக இருந்துவருகிறார்கள்.
எஜமான் விசுவாசம்....?