சாமன்யர் மீது முதல் வழக்கு பாய்ந்தது! புதிய குற்றவியல் சட்டம் இன்று முதல் அமுல்! புல்டோசர் சட்டம் என காங்கிரஸ் விமர்சனம்!!

நரேஷ். என்.
புதிய குற்றவியல் சட்டம் இன்று முதல் அமலுக்கு வந்தது. இந்நிலையில் இந்தச் சட்டத்தின் கீழ் முதல் வழக்கு டெல்லியில் சாமன்யர் மீது பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
முந்தைய ஐபிசிக்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதாவும், சிஆர்பிசி-க்கு மாற்றாக பாரதிய நாகரிக் சுரக்ஷா மற்றும் ஐஇசி சட்டத்துக்கு மாற்றாக பாரதிய சாக்ஷியா சட்டமும் அமலுக்கு வந்தது.
- பாரதிய நியாய சன்ஹிதா, 2023: இந்திய தண்டனைச் சட்டம் 1860-க்கு மாற்றான இந்தப் புதிய சட்டத்தில் தேசதுரோகம் என்பதை நீக்கி மாறாக, பிரிவினைவாதம், கிளர்ச்சி, நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு எதிராக தண்டனை வழங்கும் புதிய பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. சிறுவர்களை கூட்டு வன்கொடுமைக்கு உள்ளாக்குதல் மற்றும் கும்பலாக அடித்து கொலை செய்வதுற்கு மரண தண்டனை வழங்க வகை செய்கிறது.
- பாரதிய நாகரிக் சுரக்ஷா 2023: இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்துக்கு மாற்றாக இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்படி, கால வரையறைக்குள் விசாரணை மற்றும் வாதங்கள் நடத்தப்பட வேண்டும். விசாரணை முடிந்த 30 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்க வேண்டும். பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்களின் வாக்குமூலம் வீடியோவாக பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குற்றத்தின் வருமானம் மற்றும் சொத்துக்களை இணைக்கும் புதிய வழிமுறை இணைக்கப்பட்டுள்ளது.
- பாரதிய சாக்ஷியா 2023: இது இந்திய சாட்சிகள் சட்டம் 1972க்கு மாற்றாக கொடுவரப்பட்டுள்ளது. இதன்படி, நீதிமன்றங்களில் சமர்ப்பிக்கப்படும் அல்லது ஏற்றுக்கொள்ளப்படும் சாட்சிகளில், மின்னணு அல்லது டிஜிட்டல் ஆவணங்கள், மின்னஞ்சல்கள், சர்வர் பதிவுகள், கணினி, மடிக்கணினி, குறுஞ்செய்திகள், இணையதளங்கள், சம்பவம் நடந்த இடத்தின் சான்றுகள், அஞ்சல்கள், சாதனங்களில் உள்ள செய்திகள் ஆகியவை அடங்கும்.
வழக்கு ஆவணம், முதல் தகவல் அறிக்கை, குற்ரப்பத்திரிக்கை மற்றும் தீர்ப்புகள் டிஜிட்டல்மயாக்கப்பட வேண்டும். காகித ஆவணங்களைப் போலவே டிஜிட்டல் மற்றும் மின்னணு ஆவணங்களும் சட்ட அங்கீகாரம், மதிப்பு, அமலாக்கத்தன்மை பெறும்.
இந்த நிலையில், பாரதிய நியாய சன்ஹிதா 2023 சட்டப்பிரிவு 285-ன் கீழ் டெல்லி ரயில் நிலைய மேம்பாலத்தின் நடைமேடையில் பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கடை வைத்திருந்த வியாபாரி மீது டெல்லி கமலா மார்கெட் காவல் நிலையம் இந்த வழக்கைப் பதிவு செய்துள்ளது.
'புல்டோசர் சட்டங்கள்' மல்லிகார்ஜுன கார்கே,
காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே புதிய கிரிமினல் சட்டங்களை 'புல்டோசர் சட்டங்கள்' என்று விமர்சித்துள்ள அவர், தற்போது அமலுக்கு வந்துள்ள 3 புதிய குற்றவியல் சட்டங்களும் நாடாளுமன்றதில் 146 எம்.பிக்களை சஸ்பெண்ட் செய்துவிட்டு வலுக்கட்டாயமாக நிறைவேற்றப்பட்டதே ஆகும்.
இந்தியா கூட்டணி இந்த புல்டோசர் சட்டங்களை நாடாளுமன்றத்தில் பொறுத்துக் கொண்டிருக்காது'. என்று தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் நடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் போது உள்ளே நுழைந்த மர்ம நபர் வண்ணப் புகை குண்டை வீசினார். இதனால் அவையில் கூச்சல் குழப்பங்கள் ஏற்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் மத்திய அரசை எதிரித்து அமளியில் ஈடுபட்டனர்.
இதைச் சாக்காக எடுத்துக்கொண்டு எதிர்கட்சிகளைச் சேர்ந்த மூன்றில் இரண்டு பங்கு எம்.பிக்கள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஆகவே எதிர்கட்சிகளை சேர்ந்த பெரும்பாலான எம்.பிக்கள் அவையில் இல்லாமலே புதிய கிரிமினல் சட்டங்களை அமல்படுத்தும் மசோதா நிறைவேறியது சுட்டிக்காட்டபட வேண்டியது ஆகும்.
கட் அண்ட் பேஸ்ட் என்று பா.சிதம்பரம் நச் விமர்சனம்.
இந்நிலையில் புதிய சட்டங்களில் பெரும்பாலான அம்சங்கள் பழைய சட்டங்களை வெட்டி ஒட்டியதுதான் என்று காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி பா.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
புதிய சட்டங்கள் குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறியதாவது, 'இன்று நடைமுறைக்கு வந்துள்ள 3 புதிய சட்டங்களில் 90 முதல் 99 சதவீதம் வரை பழைய சட்டங்களை வெட்டி ஒட்டிய வேலை தான் நடந்துள்ளது. புதிய சட்டங்களில் உள்ள சில அம்சங்களை நங்கள் வரவேற்றோம்.
இதற்கு பழைய சட்டங்களில் சில திருத்தம் கொண்டு வந்திருந்தாலே போதும். அதை விட்டுவிட்டு புதிதாக 3 சட்டங்களை உருவாக்கியது வீண் வேலை.
அதுமட்டுமின்றி புதிய சட்ட விதிகளில் சில முன்னுக்குப் பின்னான குழப்பங்கள் உள்ளது. மாற்றங்கள் செய்யப்பட்ட சில அம்சங்கள் அரசியலமைப்புக்கு முற்றிலும் எதிரானது. இந்த அம்சங்கள் குறித்து பாராளுமன்ற நிலைக்குழுவில் உள்ள எம்.பிக்கள் கருத்து வேறுபாடு உள்ளதாக குறிப்பிட்டிருந்தும் அந்த விமர்சனங்களை அரசு கண்டுகொள்ளவில்லை. புதிய சட்டங்கள் குறித்த ஆக்கப்பூர்வமான விவாதம் எதுவும் பாராளுமன்றதில் நடைபெறவில்லை.
சட்ட வல்லுனர்கள், பார் கவுன்சில் உறுப்பினர்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள் என பலர் புதிய சட்டங்களில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டியும் அவற்றை அரசு பொருட்படுத்தவில்லை.
இதற்கு நேர்மாறாக எந்த விவாதமும் இன்றி புதிய சட்டங்களை அரசு தன்னிச்சையாக நிறைவேற்றியுள்ளது. இது அரசியலமைப்பின் மீது நேரடியாக நடத்தப்பட்ட தாக்குதல்.
இந்த புதிய சட்டங்கள் சிறிது காலத்துக்கு நீதிமன்றங்களுக்கு பெரும் சவாலாக இருக்கும். மேலும் வருங்காலத்தில் இந்த புதிய சட்டங்களில் அரசியலமைப்புக்கு எதிராக உள்ள அம்சங்கள் நீக்கப்பட்டு நீதித்துறையின் கொள்கைகள் நிலைநாட்டப்பட வேண்டும் என்று தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
ஆக மொத்தத்தில் இது கட் அண்ட் பேஸ்ட் என்று பா.சி. சொல்லியிருக்கிறார்.