போர் வெல் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த குடும்பம்! ஒன்று சேர்ந்த கிராம மக்கள்!

கு.அசோக்,
அரக்கோணம் அடுத்த அம்மனூர் ஊராட்சியில் புதியதாக ஆழ்துளை கிணறு அமைக்க ஒரு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அதை கண்டித்து கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அரக்கோணம் அடுத்த அம்மனூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஆண்டர்சன் பேட்டை பகுதியில் ஆழ்துளை கிணறு அமைந்துள்ளது. இந்த ஆழ்துளை கிணற்று நீர் குடிப்பதற்கு மிகவும் சுவையாக இருக்கும்.
இதனால் ஆண்டர்சன் பேட்டை, அவ்வை நகரை சேர்ந்த 300 குடும்பத்தினர் இந்த ஆழ்துளை கிணற்று நீரையே பருகி வந்தனர்.
இந்நிலையில் திடீரென ஆழ்துளை கிணறு பழுதடைந்த நிலையில் ஊராட்சி நிதி ரூபாய் 2.80 லட்சம் மதிப்பீட்டில் அரசுக்கு சொந்தமான இடத்தில் புதியதாக ஆழ்துளை கிணறு அமைக்க திட்டமிடப்பட்டது.
இதற்கு ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், இங்கு ஆழ்துளை கிணறு அமைக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதில் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் 200 க்கும் மேற்பட்டவர்கள் அரக்கோணம் - நெமிலி சாலையில் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.
வட்டாட்சியர் செல்வி, டவுன் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் மறியல் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது வட்டாட்சியர் செல்வி, வேறு எங்கேயும் நீர் ஆதாரம் இருந்தால் அங்கு ஆழ்துளை கிணறு அமைக்கப்படும். இல்லாவிடில் ஏற்கனவே பார்த்த இடத்திலேயே ஆழ்துளை கிணறு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அதன்பேரில் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு 40 நிமிடங்கள் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.