போலீசாரையும் ஆஸ்பத்திரியையும் அலறவிட்ட போதை ஆசாமி!

போலீசாரையும் ஆஸ்பத்திரியையும் அலறவிட்ட போதை ஆசாமி!

கு.அசோக்,

போதையில் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலின் கழிவறை கண்ணாடியை உடைத்த வாலிபர் சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்த போது ஆம்புலன்ஸ் டிரைவர்களை தாக்கினார். போதை தெளியாமல் அங்கும் இங்கும் ஓடிய நிலையில் பணியில் இருந்த டாக்டர் அலறினார். வாலிபரை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் அவரை மடக்கி பிடித்து கை கால்களை கட்டி சிகிச்சை அளித்தனர். இந்த சம்பவம் அரக்கோணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

  கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவர் அரக்கோணத்தில் உள்ள தனியார் சிமெண்ட் கம்பெனியில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். 

  தீபாவளி பண்டிகைக்கு வீட்டுக்கு செல்வதற்காக மும்பையில் இருந்து நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் அரக்கோணத்தில் பொதுப் பெட்டியில் பயணம் செய்ய வந்தார்.

   அங்கு ரயிலில் சீட் பிடிக்கும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. அப்போது மது போதையில் இருந்த வாலிபர் கிருஷ்ணகுமார் போதை தலைக்கேரிய நிலையில் ரயிலின் கழிவறை கண்ணாடியை  உடைத்தார்.

   இதில் கை நரம்பு துண்டாகி ரத்தம் கொட்டியது.  தகவல் அறிந்து ரயில்வே போலீசார் அங்கு சென்றபோது அவர்களிடமும் கடும் வாக்குவாதத்தில் அந்த நபர் ஈடுபட்டார்.

  சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் கிருஷ்ண குமாரை பிடிக்கும் போது அவர்களை தாக்க  முயன்றார். போலீசார் அவனை பிடித்து ஒரு வழியாக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கொண்டு வந்தனர்.    அங்கு கீழே இறங்கியதும் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் 4  பேரை  தாக்கினார். 

 சிகிச்சைக்காக அவசர சிகிச்சை பிரிவு வார்டுக்கு கொண்டு சென்ற போது அங்கும் இங்கும் ஓடிய நிலையில் பணியில் இருந்த டாக்டர் அலறினார்.

   இந்நிலையில் போதையில் இருந்த வாலிபர் மகப்பேறு வார்டுக்குள் ஓடியதும் அங்கிருந்த பெண்களும் அலறினார்.

   போலீசார் ஓடி சென்று வாலிபரை தாக்கி கை கால்களை துணியால் கட்டி சிகிச்சைக்கு ஸ்டெச்சரில் தூக்கி சென்றனர்.

   பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 இந்த களேபர சம்பவங்கள் அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷன் மற்றும் மருத்துவமனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.